மரணத்தில் மர்மம்... கலாபவன் மணியின் அவுட்ஹவுஸிற்கு சீல்!
திருவனந்தபுரம்: கலாபவன் மணியின் மரணத்தில் மர்மம் இருப்பதால், அவரது அவுட் ஹவுஸை பூட்டி கேரள போலீசார் சீல் வைத்திருக்கின்றனர்.
கல்லீரல் பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் நடிகர் கலாபவன் மணி கொச்சியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஆனால் அவரது மரணம் இயற்கையானது இல்லை என்று அவரது சகோதரர் போலீசில் புகார் கொடுத்தார். இதனால் மணியின் மரணத்தை செயற்கை மரணமாக போலீசார் பதிவு செய்துள்ளனர்.
மேலும் அவரது உடலில் மெத்தில் ஆல்கஹால் எப்படிப் பரவியது என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணைக்காக கலாபவன் மணியின் அவுட் ஹவுஸை தற்போது போலீசார் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
கேரளாவில் உள்ள சாலக்குடியில் கலாபவன் மணியின் வீட்டை ஒட்டி அவரது அவுட் ஹவுஸ் அமைந்துள்ளது. இந்த அவுட் ஹவுஸில் இருந்து தான் அவர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
இதனால் சீல் வைத்தது மட்டுமின்றி போலீஸ் பாதுகாப்பும் அந்த இடத்திற்கு போடப்பட்டுள்ளது. இந்த அவுட் ஹவுஸில் மணி நிறைய நேரங்களை செலவிட்டிருக்கிறார்.
இதனால் அங்கு ஏதாவது தடயங்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.