கலைஞர் டிவி வழக்கு: கருணாநிதி மகள் செல்வி ஆஜராகி சாட்சியமளிக்க கோர்ட் சம்மன்!
டெல்லி: கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி பணம் பரிமாறியது தொடர்பான அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகள் செல்வி ஜனவரி 7-ந் தேதி நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்காக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி கொடுத்த பண பரிவர்த்தனையில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றதாக அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
அண்மையில் டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்பு ஆ.ராசாவின் முன்னாள் செயலாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி சாட்சியம் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகள் அமலாக்கப் பிரிவு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஜனவரி 7-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
இவ்வழக்கில் கருணாநிதியின் இளைய மகள் கனிமொழி மீது அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.