எருமை பலியிடுவதற்குத் தடை.. இனிமே காளியை கும்பிடவே முடியாதே!
காளி கோவில்களில் பிரதானமாக நடைபெறும் எருமைகள் பலியிடுதலுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: கோவில்களில் எருமை பலியிடுதலுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதன் மூலம் காளி வழிபாட்டு முறைக்கே வேட்டு வைக்கப்படுவதாக பக்தர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதலே மாடுகள் சார்ந்த சர்ச்சை தொடர் கதையாகி வருகிறது. மாட்டிறைச்சி வைத்திருந்ததாகவே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.
விவசாயிகளுக்கு பாதிப்பு
இப்போது இதன் உச்சமாக இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை; அடிமாடுகளாக விற்பனை செய்ய கெடுபிடி என அறிவித்திருக்கிறது மத்திய அரசு. மாட்டிறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்களும் மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகளும்தான் இந்த உத்தரவால் கடுமையாக பாதிக்கப்படுவர்.
மத்திய அரசு அதிரடி தடை
அத்துடன் கோவில் விழாக்களில் எருமை மாடுகள் பலியிடுதலுக்கும் மத்திய அரசு தடை விதித்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கோவில்களில் பலியிடுதல் என்பது பல்லாயிரம் ஆண்டுகால மரபு.
நாட்டுப்புற தெய்வ வழிபாடு
ஆடு, கோழி, பன்றிகள், எருமைகளை நாட்டுப்புற தெய்வங்களுக்கு பலியிடுதல் மூலமாக தெய்வத்தின் கோபத்தை தணிக்க முடியும் என்பது ஒரு நம்பிக்கை அதுவும் காளி அம்மன் கோவில்களில் எருமை மாடுகள் வெட்டுதல் என்பது மகிசாசுரனை காளி வதம் செய்ததை நினைவுகூறும் ஒரு நிகழ்வு.
இந்துக்களின் நம்பிக்கை...
இந்துத்துவத்தின் காவலர்களாக கூறுபவர்களின் ஆட்சியிலேயே இந்துக்களின் நம்பிக்கைகளும் காளி வழிபாடு முறையும் சிதைப்பது எப்படி சரியாகும் என்பது மக்களின் கேள்வி. ஏற்கனவே தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா இதேபோல் ஒருநடவடிக்கை எடுக்கப் போய் மக்களின் கடும் எதிர்ப்புக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.