அருணாச்சல பிரதேச புதிய முதல்வராக கலிகோ புல் பதவியேற்றார் !
இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டதை அடுத்து புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கலிகோ புல் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரசில் கோஷ்டி பூசல் காரணமாக மாநில அமைச்சரவைக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் அதிருப்தி அணியாக செயல்பட்டனர். இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து முன்னாள் முதல்வர் நபம் துகி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கி கொள்ள குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நீடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ கலிகோ புல் தலைமையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர், பாஜக எம்எல்ஏக்கள் 11 பேர் மற்றும் சுயேட்சை ஒருவருடன் கடந்த திங்கட்கிழமை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து, மத்திய அமைச்சரவை ஒப்புதலை அடுத்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று இரவு கலிகோ புல் புதிய முதல்வராக பதவியேற்று கொண்டார். அவருக்கு மாநில ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Itanagar: Kalikho Pul takes oath as Arunachal Pradesh Chief Minister pic.twitter.com/sOPjDvBrDA
— ANI (@ANI_news) February 19, 2016