பயணிகள் மீது தாக்குதல்.. பேருந்துகளை இயக்க கல்லடா நிறுவனத்துக்கு ஓராண்டு தடை.. கேரளா அதிரடி
Recommended Video
திருச்சூர்: கல்லடா பேருந்தில் சேலத்தில் இருந்து கேரளா சென்ற பயணிகளை தாக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து கல்லடா நிறுவனம் கேரளாவில் இருந்து பிற மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்க ஓராண்டுக்கு தடை விதித்து திருச்சூரில் உள்ள கேரள மாநில போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி தமிழகத்தச் சேர்ந்த சேலத்தில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் நோக்கி கல்லடா டிராவல்ஸ் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அதில் மாணவர்கள் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்து கோளாறு காரணமாக நடுவழியில் நின்றுள்ளது.
இதனால் மாற்று பேருந்தை ஏற்பாடு செய்து கொடுக்குமாறு ஊழியர்களிடம் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்போது மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர். அவர்கள் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பயணிகள் மாற்று வண்டியில் பயணிக்க ஏற்பாடு செய்யுமாறும் கல்லடா நிறுவனத்தினருக்கு உத்தரவிட்டனர். அதன்படி மாற்று பேருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதனிடையே பேருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே விட்டிலா பகுதியை அடைந்தபோது, டிராவல்ஸ் ஏஜென்ஸி ஊழியர்கள் மாணவர்களை கடுமையாக தாக்கியனர் இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதனை பார்த்து பொதுமக்கள் பலர் கொதித்து போய் கேரள அரசுக்கு எதிராகவும், போலீசுக்கு எதிராகவும் கடுமையான கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்,
இந்நிலையில் திருச்சூர் மாநில போக்குவரத்து ஆணையம் கேரளாவில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்கும் கல்லடா டிராவல்ஸின் அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒரு வருட காலத்திற்கு கல்லடா டிராவல்ஸ் நிறுவனம் பிற மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்க முடியாது. இதுவரை கல்லடா டிராவல்ஸ் மீது 17 புகார்கள் வந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக திருச்சூரில் உள்ள மாநில போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே கல்லடா டிராவல்ஸில் இன்னொரு மோசமான சம்பவமும் நடந்திருப்பது தற்போது வெளியே வந்துள்ளது. கண்ணூரில் இருந்து கொல்லத்திற்கு கல்லடா பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரிடம் அந்த பேருந்து டிரைவர் ஒருவர் தவறாக நடக்க முயன்றாக கூறப்படுகிறது. மற்ற பயணிகள் சத்தம் போட்டு சண்டை போட்டதால் பிரச்னை அன்றுடன் முடிவுக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கல்லடா டிராவல்ஸ் நிறுவனத்திற்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.