அமிதாப் பச்சன் நடித்த கல்யாண் ஜுவல்லரி விளம்பரத்தால் பேங்க் ஆபீசர்கள் கொதிப்பு! அப்படி என்ன உள்ளது?
Recommended Video
மும்பை: நடிகர் அமிதாப் பச்சன், நடித்துள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் டிவி விளம்பரத்திற்கு , அனைத்து இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு (AIBOC) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வங்கி கூட்டமைப்பில் இதுதான் மிகப் பெரிய சங்கம் என்பது கவனிக்கத்தக்கது.
இந்தியாவின் முன்னணி ஜுவல்லரியாக உள்ள கல்யாண் ஹிந்தியில் உருவாக்கியுள்ள ஒரு விளம்பர படத்தில் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவர் மகள் ஸ்வேதா பச்சன் நந்தா நடித்துள்ளனர். மகளுடன் அமிதாப் சேர்ந்து நடித்த முதல் விளம்பரம் இது என்பதால் பெரும் வரவேற்பை இந்த விளம்பரம் பெற்றது.
|
விளம்பரத்தில் இருப்பது என்ன?
இந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளுக்குதான் வங்கி சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த விளம்பர காட்சியில் மகளுடன் வங்கியொன்றுக்கு செல்கிறார் அமிதாப் பச்சன். பென்ஷன் தொடர்பாக பேச்சை எடுத்ததுமே, அவரது பாஸ்புக்கை தள்ளிவிடுகிறார் ஒரு வங்கி ஊழியர். இப்படியாக கவுண்டருக்கு, கவுண்டர் மாறி பின்னர் ஒரு ஊழியர், மேலாளரை பார்க்க கூறுகிறார். மேலாளரை பார்க்கும் அமிதாப் பச்சன், தனக்கு ஒரு மாதத்தில் இருமுறை, பென்ஷன் தொகை கிரெடிட் ஆகிவிட்டதாக கூறுகிறார். இதை கேட்ட மேலாளர், இதற்கு நீங்கள் பார்ட்டிதான் வைக்க வேண்டும் என சிரிக்கிறார். ஆனால், இப்படி ஏமாற்றி வருமானம் பார்ப்பது தனது கொள்கைக்கு எதிரானது என்கிறார் அமிதாப் பச்சன். ஷாக்காகிறார் வங்கி மேலாளர்.
வங்கிகள் மீது கெட்ட பெயர்
இப்படித்தான் ஒன்றரை நிமிட விளம்பர காட்சி விரிவடைகிறது. இவ்வாறு விளம்பரத்தில் வங்கிகள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது ஏற்புடையதல்ல என்கிறது, அனைத்து இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு. இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சவும்யா தத்தா கூறுகையில், வெவ்வேறு காரணங்களால் ஏற்கனவே வங்கிகள் மீது மக்களிடம் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த விளம்பரம் அதை மேலும் தூண்டுகிறது. வாடிக்கையாளர் சேவையே எங்களின் முதல் நோக்கம்" என்றார்.
கல்யாண் ஜுவல்லரி விளக்கம்
இதனிடையே, இந்திய விளம்பர தர கவுன்சிலிடம் வங்கிகள் சங்கம் சார்பில் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, விளம்பரத்தில் பொறுப்பு துறப்பு வாசகங்களை சேர்த்துக்கொள்ள சம்மதிப்பதாகவும் 3 நாட்களுக்குள் அதை செய்கிறோம் என்றும் கல்யாண் ஜுவல்லரி தெரிவித்துள்ளது. அதன்படி "இந்த விளம்பரத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் கற்பனையே. யாரையும், எந்த பிரிவு மக்களையும் மலினப்படுத்தும் நோக்கம் கொண்டது இல்லை" என்ற பொறுப்பு துறப்பு வாசகங்களை சேர்த்துக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.
வழக்கு, போராட்டம்
ஆனால் கல்யாண் ஜுவல்லரியின் பொறுப்பு துறப்பு போதாது என்று சவும்யா தத்தா தெரிவித்தார். விளம்பரத்தையே நீக்க வேண்டும் என்பது அவரின் கோரிக்கையாக உள்ளது. கல்யாண் ஜுவல்லரி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதோடு, விளம்பரத்தையும் நீக்காவிட்டால், வழக்கு தொடருவது, போராட்டம் நடத்துவது உள்ளிட்ட எதிர்வினைகளில் இறங்க வேண்டியிருக்கும் என்று அனைத்து இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. இச் சங்கத்திற்கு 3.2 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.