சீக்கியர்கள் வன்முறை வழக்கு...பஞ்சாப் தேர்தல் பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார் கமல் நாத்
டெல்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக தன் மீது எழுந்த குற்றசாட்டுகளை அடுத்து பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளராக பதவியை கமல் நாத் ராஜினாமா செய்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனிடையே திடீரென உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டு குலாம்நபி ஆசாத்தும் கமல்நாத்தும் புதிய பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
கட்சியின் உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கு கமல்நாத் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் காங்கிரஸுக்கு எதிரான ஆயுதமாக 32 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது.
சீக்கியர்கள் படுகொலை வழக்கில் பல காங்கிரஸ் தலைவர்கள் பெயர்களும் அடிபட்டு வந்தன. இந்த வழக்கின் குற்றபத்திரிகையில் இடம்பெற்றுள்ள கமல் நாத், கங்கிரசின் பஞ்சாப் தேர்தல் பொருப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதை அகாலி தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கடுமையாக விமரசம் செய்தன.
இதையடுத்து பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளர் பதவியை கமல் நாத் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக கட்சி தலைமைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களால் மனதளவில் காயம் அடைந்துள்ளதாகவும், எனவே தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.