மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்காங்க.. மன்னிக்க மாட்டார்கள்.. கமல்நாத்
போபால்: மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாஜகவை மன்னிக்கவே மாட்டார்கள் என மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆட்சி, அதிகார போட்டியால் காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரை தூண்டிவிட்டார் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா.
இதையடுத்து 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். 6 பேரின் கடிதங்களை மட்டுமே சபாநாயகர் ஏற்றார். மற்ற 16 பேரின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்படவில்லை. இதனிடையே சிந்தியா பாஜகவில் இணைந்தார்.
இதையடுத்து கமல்நாத் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டும் அது 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்குள் அதிருப்தி எம்எல்ஏக்களை மீட்டு விடலாம் என காங்கிரஸ் கட்சி கருதியது. இதனிடையே சட்டசபையில் மார்ச் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் 16 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதனால் கமல்நாத்திற்கு பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினாலும் காங்கிரஸ் தோற்கும் நிலை உள்ளது. இதனால் கமல்நாத் இன்று ராஜினாமா செய்தார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மத்திய பிரதேசம் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் இருக்கும் உண்மை இந்த நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பெங்களூரில் காங். எம்எல்ஏக்கள் இருப்பதன் பின்னணி விரைவில் வெளியே வரும். பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.