மத்திய அரசின் மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர்! பிரதமர் மோடி பரிசீலனை!!
டெல்லி: மத்திய அரசின் மதிய உணவு திட்டத்துக்கு, தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரை சூட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்த காலகட்டத்தில்தான் மதிய உணவு திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்தார். இதனால் சாப்பாட்டுக்காகவாவது குழந்தைகள் பள்ளிக்கு வர தொடங்கினர். இதனால் தமிழகத்தில் பெரும் கல்வி புரட்சி ஏற்பட்டு, இன்று ஏழை, எளிய மக்களும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.
சத்துணவாக்கிய எம்ஜிஆர்
பின்னர் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் மதிய உணவு திட்டத்தில் முட்டை அளித்து, சத்துணவு திட்டமாக அதை அப்கிரேட் செய்தார். தமிழகத்தின் இந்த முன்னோடி திட்டத்தால் ஈர்க்கப்பட்ட மத்திய அரசு, மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் 12 கோடி மாணவ, மாணவிகள் இத்திட்டத்தால் பலனடைகின்றனர்.
நரசிம்மராவ் காலத்து கோரிக்கை
திட்டத்தின் முன்னோடியான காமராஜரின் பெயரை மதிய உணவு திட்டத்திற்கு சூட்ட வேண்டும் என்று நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அவரிடம் குமரி அனந்தன் கோரிக்கைவிடுத்தார். அதையேற்று நரசிம்மராவ், மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட முனைந்தபோது, காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சிலர் தடுத்துவிட்டதாக கூறப்படுவதுண்டு. மணிசங்கர் அய்யர், சோனியா காந்தி போன்றோரின் பெயர்கள் இந்த சர்ச்சையில் அடிபட்டன.
ஜாதி சங்கங்கள் வலியுறுத்தல்
இந்நிலையில்தான் இப்போது காமராஜர் பெயரை சூட்டுமாறு கோரிக்கைகள் வலுக்க தொடங்கியுள்ளன. கட்சிகள் காமராஜரை மறந்த நிலையில், நாடார் சங்கங்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மனு அனுப்பியபடி உள்ளன. குஜராத், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் நாடார் ஜாதியினர் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். கர்நாடகாவில் ஈடிகர்கள் என்றும், கேரளத்தில் ஈழவர்கள் என்றும், தமிழகத்தில் நாடார்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஒன்றிணைந்த ஜாதிகள்
இதேபோலத்தான் பிற மாநிலங்களில் பூஜாரி, பண்டாரி, ஜெய்ஸ்வால், அகுவாலியா என்ற பெயர்களிலும் நாடார்கள் அழைக்கப்படுகின்றனர். பல மாநில நாடார் இன மக்களும் ஒன்றிணைந்து, தங்களை வாக்னர் சேனா ஜாதி என்ற பெயரில் சகோதர ஜாதிகளாக ஒன்றிணைத்துள்ளனர். இவர்கள் எண்ணிக்கை சுமார் 7 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டமைப்பு மொத்தமாக இணைந்து, மோடியிடம் மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயரை சூட்டுமாறு கோரிக்கைவிடுத்துள்ளன.
அரசியல் லாபமும் உள்ளது
மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயரை சூட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பது மட்டுமின்றி, 7 கோடி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி அரசியல் ஆதாயமும் அடையலாம் என்பது மோடியின் விருப்பமாக இருக்கிறது. திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் தமிழக மாவட்டங்களில் நாடார் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். தென்சென்னை, கோவையில் கணிசமான அளவுக்கு நாடார் சமூகத்தினர் உள்ளனர். இங்கெல்லாம் பாஜகவின் செல்வாக்கை உயர்த்தவும் இந்த உத்தரவு பயன்படும்.
காமராஜருக்கு மரியாதை
காமராஜரின் பெயரை மதிய உணவு திட்டத்திற்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஜெயலலிதா நிறைவேற்றாத நிலையில், மோடி அக்கோரிக்கையை நிறைவேற்றினால் நாடார் சமூகத்திடம் மட்டுமின்றி, காமராஜர் மீது மரியாதை வைத்துள்ள தமிழக மக்களில் பெரும்பாலானோரிடமும் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தேசிய நீரோட்டத்தில் தமிழகம்
அகில இந்திய திட்டத்திற்கு தமிழக முன்னாள் முதல்வர் ஒருவரின் பெயரை சூட்டுவதன் மூலம் தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழகம் விலகவில்லை என்ற கருத்துருவாக்கமும் ஏற்படும். இதையெல்லாம் மனதில் வைத்தும், தமிழக பாஜகவினரின் வலியுறுத்தலின்பேரிலும் விரைவிலேயே காமராஜர் பெயரை மத்திய அரசின் மதிய உணவு திட்டத்திற்கு சூட்டப்படும் என்று தெரிகிறது.