ஜல்லிக்கட்டு பாணி.. கர்நாடகாவின் 'கம்பளா' போட்டிக்கும் கிடைத்தது ஜனாதிபதி அனுமதி!
கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பளாவை மீண்டும் நடத்துவதற்கான அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் ஒப்புதல் அளித்துள்ளார்.
காளை உள்ளிட்ட விலங்குகளை காட்சிப் பட்டியலில் கடந்த கால காங்கிரஸ் தலைமையிலான அரசு சேர்த்ததால், ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மக்களிடம் பணிந்த, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு அவசர சட்டத்தை இயற்றி, அதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றதோடு, ஜனாதிபதியிடமும் ஒப்புதல் பெற்றது. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதே போல கா்நாடகாவில் பாரம்பரிய விளையாட்டான கம்பளாவிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி அம்மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தினர். எனவே தமிழகம் பாணியில், கர்நாடக மாநில அரசும் கம்பளாவை மீண்டும் நடத்த வகை செய்யும் அவசர சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியது.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதல் பெற அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், கம்பளா போட்டியை நடத்துவதற்கான மசோதாவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். கம்பளா என்பது எருமை மாட்டை ஏரில் பூட்டி தண்ணீரில் ஓடவிட்டு, பங்கேற்பாளரும் பின்னால் ஓடும் போட்டியாகும்.