"மொட்ட சிவா கெட்ட சிவாடா":.. எப்பத்தான் மாறப் போறாரோ காம்ப்ளி!
மும்பை: வினோத் காம்ப்ளி கிரிக்கெட்டில் (குறுகிய காலமே விளையாடியிருந்தாலும்) எந்த அளவுக்கு பரபரப்பாக இருந்தாரோ அதை விட பரபரப்பாக இருக்கிறது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. அவ்வப்போது ஏதாவது பெரிய சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார் காம்ப்ளி.
இப்போது கூட தன் வீட்டு பணிப்பெண்ணை சித்திரவதை செய்ததாக புகாருக்குள்ளாகியிருக்கிறார் காம்ப்ளியும். அவரது மனைவி பெயரும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் சர்ச்சைகள் காம்ப்ளிக்கு புதிதல்ல. காரணம், அவர் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர். அது கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி. உரிய அங்கீகாரம் கிரிக்கெட்டில் கிடைக்காமல் போன மன உளைச்சல் வேறு.
2 திருமணங்கள்
காம்ப்ளி இரண்டு முறை திருமணம் செய்தவர். முதல் மனைவி பெயர் நோயல்லா லூயிஸ். புனே ஹோட்டலில் வரவேற்பாளராக இருந்தவர். 1998ல் இந்தத் திருமண் நடந்தது. அதன் பிறகு அவரை விட்டுப் பிரிந்தார் காம்ப்ளி. பின்னர் மாடல் அழகி ஆன்ட்ரியா ஹெவிட்டை மணந்தார். இந்தத் தம்பதிக்கு 2010ல் மகன் பிறந்தான்.
இளம் வயதிலேயே இருதயப் பிரச்சினை
2013ம் ஆண்டு காம்ப்ளிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பையில் கார் ஓட்டிச் சென்றபோது வழியில் மாரடைப்பு ஏற்பட்டு டிராபிக் போலீஸ்காரர் ஒருவர் பார்த்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அவரது இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டியும் செய்யப்பட்டது.
அரசியல் பிரவேசம்
கிரிக்கெட்டில் வாழ்க்கையை இழந்த பின்னர் விரக்தியில் இருந்து வந்த காம்ப்ளி, லோக் பாரதி கட்சி என்ற கட்சியில் இணைந்து அதன் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2009 லோக்சபா தேர்தலில் விக்ரோலி தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட்டைப் பறி கொடுத்தார்.
அன்னாவுக்கு ஆதரவு
பின்னர் 2011ல் அன்னா ஹஸாரே போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தார். அதுவும் பாதியிலேயே காணாமல் போனது. இப்போது அவரது நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை.
சினிமாவையும் விடவில்லை
சினிமாவிலும் நடித்துப் பார்த்தார் காம்ப்ளி. 3 படங்களில் நடித்துள்ளார். அதில் இரு படங்கள் இந்தி, ஒன்று கன்னடப் படமாகும்.
தொடர் சர்ச்சைகள்
காம்ப்ளியின் இத்தனை வருட கால வாழ்க்கையில் அவர் சாதனைகளுக்காகப் பேசப்பட்டதை விட சர்ச்சைகளுக்காகவே அதிகம் பேசப்பட்டிருக்கிறார். இதை அவரது துரதிர்ஷ்டம் என்பதா என்ன என்பது என்று தெரியவில்லை.
சித்துவைத் திட்டி டிவிட்
ஒரு முறை ஐபிஎல் தொடரின்போது வர்னணையில் ஈடுபட்டிருந்த சித்து மற்றும் ரமீஸ் ராஜா ஆகியோரைத் திட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையான கருத்தைப் போட்டிருந்தார் காம்ப்ளி. ஆனால் நான் போடவில்லை என்று பின்னர் மறுத்தார்.
சச்சினுடன் மோதல்
சச்சினும், காம்ப்ளியும் பள்ளிக் காலத்தில் மிக நெருக்கமான தோழர்களாக இருந்தவர்கள். இருவரும் இணைந்து பள்ளி அளவிலான கிரிக்கெட்டில் பல சாதனைகளையும் படைத்தவர்கள். ஆனால் அப்படிப்பட்ட நண்பருடன் நெருக்கமான நட்பை பின்னாளில் பேணாமல் விட்டு விட்டார் காம்ப்ளி. சச்சினுக்கு எதிராக பலமுறை பேசியுள்ளார் காம்ப்ளி.
மேட்ச் பிக்ஸிங் புகார்
1996ல் நடந்த உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் பெரும் வன்முறை மூண்டு அந்தப் போட்டியில் இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது ஈடன்கார்டன் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார் காம்ப்ளி. அந்தக் காட்சியை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. ஆனால் சமீபத்தில் அந்தப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் செய்யப்பட்டதாக காம்ப்ளி குற்றம் சாட்டி பரபரப்பை கிளப்பினார். இந்திய வீரர்கள் சிலரே அந்தப் போட்டியை வேண்டும் என்று விட்டுக் கொடுத்ததாக குற்றம் சாட்டினார் காம்ப்ளி.
வீட்டுக் கடனைக் கட்டாமல்
மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டைக் கட்டுவதற்காக வீட்டு வசதி சொசைட்டியில் வாங்கிய ரூ. 10 லட்சம் கடனைக் கட்டாதது தொடர்பான சர்ச்சையிலும் சிக்கினார் காம்ப்ளி.
நல்ல வீரராக இருந்து
இப்படி காம்ப்ளியைச் சுற்றிச் சுற்றி வரும் சர்ச்சைகள் ஏராளம். இப்போது வீட்டு வேலைக்காரப் பெண் கொடுத்துள்ள புகாரில் சிக்கியுள்ளார் காம்ப்ளி. இதிலிருந்து எப்படி மீளப் போகிறார். எப்போது மாறப் போகிறார் என்று தெரியவில்லை. அருமையான கிரிக்கெட் வீரர் காம்ப்ளி என்பதை பலரும் இன்னும் மறக்கவில்லை. அதேபோல அருமையான மனிதராகவும் அவர் மாற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.