எவரெஸ்ட் சிகரத்தில் 23 முறை ஏறி புதிய உலக சாதனை.. நேபாளத்தை சேர்ந்த கமி ரிதா ஷெர்பா அசத்தல்
காத்மாண்டு: நேபாளத்தை சேர்ந்த மலையேற்றத்தில் மிகுந்த அனுபவம் உள்ள கமி ரிதா ஷெர்பா 23-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவருக்கு 49 வயதாகிறது.
23-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்டுள்ள கமி ரிதா ஷெர்பா, அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார். உலகிலேயே மிக உயரமான சிகரமாக கருதப்படுகிறது எவரெஸ்ட். இது 8,850 மீட்டர் உயரம் கொண்டது. ஆண்டுதோறும் மார்ச் - மே மாதம் வரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கும் முயற்சியில் மலையேற்ற வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு உதவும் பணியில் ஷெர்பா இனத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேபாளத்தை சேர்ந்தவரான கமி ரிதா ஷெர்பா நேற்று காலை 7.50 மணி அளவில் 23-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவர் கடந்த 1994-ம் ஆண்டு முதல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வருகிறார்.
கடந்த 1995ம் ஆண்டில் அவர் முயற்சி கைகூடவில்லை. அந்த ஆண்டு உடன் வந்த மலையேற்ற வீரருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய முடியாமல் போனது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டில் 21-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு, அபா ஷெர்பா, புர்பா தஷி ஷெர்பா ஆகியோரின் உலக சாதனையை கமி ரிதா ஷெர்பா சமன் செய்தார்.
இதனையடுத்து கடந்த ஆண்டு அவர் 22வது முறையாக எவரெஸ்ட்டில் ஏறி உலக சாதனை படைத்தார். தற்போது 23வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு சென்று தனது சொந்த சாதனையை தானே முறியடித்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.
ஆத்து பாலத்தில் .. 6வது நாளாக 'ரெஸ்ட்' எடுக்கும் பெருமாள்.. குவிகிறது கூட்டம்.. களை கட்டும் பூஜைகள்
வானிலையை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் 378 பேர் மட்டுமே எவரெஸ்டிற்கு செல்ல நேபாளம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய தொகை 11 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7.75 லட்சம் ஆகும்.