ஜெயேந்திரர் உடல் நிலையில் முன்னேற்றம்.. ஐ.சி.யூவிலிருந்து நார்மல் வார்டுக்கு திரும்பினார்
விஜயவாடா: காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி உடல் நலக்குறைவால் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது.
காஞ்சி மடத்தி 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு ( 81) விஜயவாடாவிலும் மடம் உள்ளது. அங்கு தங்கியிருந்து ஆன்மீக பணிகளை மேற்கொண்டு வந்த அவருக்கு நேற்று திடீரென உடல் நலம் குன்றி மயக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர், அந்த நகரிலுள்ள 'ஆந்திரா மருத்துவமனை'யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஐ சி யு பிரிவில் ஜெயேந்திரர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
டாக்டர் ரவிராஜு தலைமையில் மருத்துவ குழு ஜெயேந்திரருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. ரவிராஜு கூறுகையில், ஜெயேந்திரருக்கு ரத்தத்தில் ஷுகர் அளவு மற்றும் சோடியம் அளவு குறைந்துள்ளது. இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அச்சப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்றார்.
ஜெயேந்திரருக்கு உடல் நலம் குன்றிய தகவல் அறிந்த ஏராளமான பக்தர்கள் அவர் நலம் பெற சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஜெயேந்திரர் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. அவர் ஐசியூ பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து மடத்திற்கு திரும்புவார் எனவும், அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெயேந்திரரை பார்த்து நலம் விசாரித்ததோடு, அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார். சென்னையில் இருந்து, ஜெயேந்திரரின் தனிப்பட்ட மருத்துவர்களும் விஜயவாடா சென்றுள்ளனர்.