கன்யா குமாரை பகத் சிங்குடன் ஒப்பிட்ட சசி தரூர்...பாஜக காட்டம்
டெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் உடன் கன்யா குமாரை ஒப்பிட்டுப் பேசியதன் மூலமாக, சசிதரூர் வேண்டுமென்றே பகத் சிங்கை அவமதித்துள்ளார் என பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய முன்னாள் அமைச்சர் சசிதரூர், ஆங்கிலேயர் ஆட்சியில் ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், அன்னிபெசன்ட், பகத்சிங் ஆகியோர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டதாக தெரிவித்தார்.
அப்போது ஒரு மாணவி, "மாணவர் தலைவர் கன்யா குமார் மீதும் தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறதே?" என்று கேட்டார். அதற்கு சசிதரூர், "பகத் சிங் காலத்தில் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவானதுபோல் கன்யா குமார் காலத்தில் அவர் மீது இந்த வழக்கு போடப்பட்டு இருக்கிறது" என்று பதில் அளித்தார்.
சசி தரூரின் இந்த பதிலுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷானவாஸ் ஹூசேன் கூறுகையில், பகத்சிங்குடன் கன்யா குமாரை ஒப்பிட்டது தவறு. பகத்சிங், பாரத மாதா வாழ்க என்ற முழக்கத்துடன் விடுதலைக்காக போராடினார்.
எனவே நாட்டுக்காக போராடிய ஒரு தலைவருடன் கன்யா குமாரை சசிதரூர் ஒப்பிட்டது சுதந்திர போராட்டத்தையும், சுதந்திர போராட்ட தியாகிகளையும் இழிவுபடுத்துவது போல் உள்ளது. கன்யா குமார் பகத் சிங் என்றால், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி யார் என்பதை சசி தரூர் சொல்ல வேண்டும்" என்றார்.
இதனைத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்த சசிதரூர், கன்யா குமாரை பகத்சிங்குடன் ஒப்பிடும் நோக்கத்தில் நான் பேசவில்லை என்றார். பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது கூறியதில், நீங்கள் சிறு விஷயத்தை கண்டுபிடிக்கிறீர்கள். பகத்சிங் காலனித்துவ ஆட்சியை எதிர்த்து போராடியவர்.
கன்யா குமார் அவருடைய நம்பிக்கைக்காக மாறுபட்ட ஜனநாயகத்தில் போராடுகிறார். எனவே சூழ்நிலையானது வேறுபட்டது. ஆனால், ஒப்பிடுகையில் 20 வயதுகளில் இளம், மார்க்சிய, லட்சியவாதிகள் தங்கள் தாய்நாட்டிற்காக செயல்பட்டார்கள். அவ்வளவுதான்" என்று சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார்.