கன்னையா ஒன்றும் ஹீரோ இல்லை; நல்வழியில் இருந்து தடம் மாறியவர்- அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி பேச்சு
டெல்லி: டெல்லி ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவரான கன்னையா குமார் ஒன்றும் பெரிய ஹீரோ அல்ல என்றும், அவர் நல்ல வழியில் இருந்து தடம் மாறிய மாணவர் என்றும் மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "உலகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இடதுசாரி கட்சிகள் சீர்குலைந்துவிட்டன. இடதுசாரிகள் அரசியல் களத்தில் காணாமல் போய்விட்டதால் பல்கலைக்கழகங்கள், ஊடகம், தொண்டு அமைப்புகள் ஆகியவற்றை நோக்கி நகர்கின்றனர். அவற்றின் மூலம் மக்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்த முயலுகின்றனர்.
மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரை கதாநாயகனாகக் காட்ட இடதுசாரிக் கட்சிகள் முயலுகின்றன. அவர் நல்வழியில் இருந்து தடம் மாறியவர். அவர் ஒன்றும் கதாநாயகன் அல்ல.
தேசியவாதத்தில் நம்பிக்கையுள்ள நபர்கள் யாரும் கன்னையா குமாரின் பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். தேசத் துரோக நடவடிக்கைகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வரக் கோரும் மனு, நீதிமன்றத்தின் முன்பு நிலுவையில் உள்ளது.
மேலும், எத்தகைய நடவடிக்கைகளை தேசத் துரோக நடவடிக்கைகளாகக் கருதலாம் என்பது தொடர்பான சட்டப் பிரிவுகள் ஏற்கெனவே அமலில் உள்ளன. தேச விரோத நடவடிக்கைகளுடன் சகிப்புத்தன்மையையும் சேர்த்துப் பாக்கக் கூடாது. அத்தகைய நடவடிக்கைகளுடன் சமரசம் செய்து கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.