அங்கன்வாடி ஊழியரின் மகன்.. பீகார் முதல்வராக திட்டமிடும் கன்ஹையா குமார்.. பிகே உடன் விரைவில் மீட்?
பீகார் சட்டசபை தேர்தலில் முதல்வர் பதவிக்கு கன்ஹையா குமாரை முன்னிறுத்த திட்டங்கள் போடப்பட்டு வருவதாக தகவல்கள் வருகிறது.
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் முதல்வர் பதவிக்கு கன்ஹையா குமாரை முன்னிறுத்த திட்டங்கள் போடப்பட்டு வருவதாக தகவல்கள் வருகிறது. அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் திட்டப்படி இதற்கான பணிகள் நடந்து வருகிறது என்கிறார்கள்.
நான் ஒரு அங்கன்வாடி ஊழியரின் மகன். நான் இந்த தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டேன் என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் நான் தோற்கவில்லை. நான் தேர்தலில் போட்டியிட்டேன்.
எனக்கு பலர் வாக்களித்தனர். பல லட்சம் மக்களின் மனதை நான் வென்று இருக்கிறேன். அதற்காக நான் பெருமை கொள்கிறேன். பெரிய பண பின்னணி இல்லாமல், பணம் கொண்ட பலரை நான் தைரியமாக மோதி இருக்கிறேன், என்று கன்ஹையா குமார் தெரிவித்தார்.
கன்ஹையா குமார் யார்
கடந்த லோக்சபா தேர்தலில் பீகாரில் பேகுசராய் தொகுதியில் போட்டியிட்டு 2.69 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்த பின் கன்ஹையா குமார் சொன்ன வார்த்தைகள் இது. இதோ இவர் இப்போது மிகவும் பிசியாக இருக்கிறார். சிஏஏ சட்ட திருத்தம் செய்யப்பட்டதில் இருந்து இவர் அதற்காக போராடி வருகிறார். பீகார் கடந்த இரண்டு மாதமாக மிக தீவிரமாக போராட்டங்களை நடத்தி வருகிறார். பீகாரில் இவர் நடத்தும் கூட்டங்கள் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
எப்படி இது
பீகாரில் இவர் தினமும் ஒரு கிராமத்திற்கு சென்று போராட்டம் செய்கிறார். பெரிய அளவில் மேடை அமைத்து பேசி வருகிறார். மிக முக்கியமாக வட இந்தியாவில் மோடிக்கு கூடும் கூட்டத்தை விட தற்போது கன்ஹையா குமாருக்கு அதிக அளவில் கூட்டம் கூடுகிறது. அங்கு கன்ஹையா குமாருக்கு இளைஞர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு கொடுக்கிறார்கள். அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் அலைமோதுகிறது.
தினம் தினம்
தினமும் விடாமல், எந்த சுணக்கமும் இன்றி கன்ஹையா குமார் மிக தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஒலிக்கும், ஆசாதி கோஷத்தை முதலில் எழுப்பியது கன்ஹையா குமார்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், கன்ஹையா குமார் இந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை வழி நடத்தி வருகிறார். பீகார் மக்கள் இவரை பெரிய அளவில் பின்பற்றி வருகிறார்கள். கண்ணன் கோபிநாத் தொடங்கி ஜிக்னேஷ் மேவாணி வரை எல்லோரும் கன்ஹையா குமாருக்குத்தான் ஆதரவாக இருக்கிறார்கள்.
என்ன கட்சி
இவர் தற்போது சிபிஐ கட்சியில் இருக்கிறார். இவர் தேசிய கவுன்சில் நிர்வாகி பதவி அளிக்கப்பட்டுள்ளது. இவர் விரைவில் புதிய கட்சியில் சேர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இல்லையென்றால் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்ட, இவர் வேறு சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து பீகார் தேர்தலை சந்திப்பார் என்கிறார்கள். இந்த வருட இறுதியில் பீகார் தேர்தல் நடக்க உள்ளது. இந்த சட்டசபை தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
முக்கியம்
இந்த சட்டசபை தேர்தலில் பீகார் முதல்வர் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாரை வீழ்த்த அவரின் முன்னாள் நண்பர், ஜாம்பவான் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளார். இதனால் நிதீஷிடம் அவர் நேரடியாக சவாலே விட்டுள்ளார். இந்த நிலையில்தான் நிதிஷ் குமாருக்கு பதில் கன்ஹையா குமாரை முன்னிறுத்த பிரஷாந்த் கிஷோர் முயற்சி செய்து வருகிறார் என்கிறார்கள். இவர்கள் இருவரும் இது தொடர்பாக ஆலோசித்து வருகிறார்கள்.
என்ன முயற்சி
அதேபோல் ஐக்கிய ஜனதா கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பவன் வெர்மா, நிதிஷ் மூலம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பவன் வெர்மா புதிய கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறார். இந்த சிறிய கட்சிகளை வைத்து, பிரசாந்த் கிஷோர் விரைவில் கன்ஹையா குமாரை முன்னிறுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள். கன்ஹையா குமாருக்கு இருக்கும் மக்கள் ஆதரவுதான் இதற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது.
என்ன காரணம்
கன்ஹையா குமார் இமேஜ் கடந்த இரண்டு மாதங்களில் பெரிய அளவில் கூடியுள்ளது. இதனால் பீகாரில் ஆம் ஆத்மி, கன்ஹையா , பவன் வெர்மா என்ற பெரிய கூட்டணியை விரைவில் பிரசாந்த் கிஷோர் உருவாக்க வாய்ப்புள்ளது. இது பீகார் அரசியலை மாற்றும் என்கிறார்கள்.முன்னதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போது, மிக்க நன்றி நிதிஷ் குமார். பீகாரின் முதல்வராக நீங்கள் மீண்டும் தேர்வு செய்யப்படுவதற்கு என்னுடைய சிறந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று கிஷோர் சூசகமாக குறிப்பிட்டு இருந்தார்.