மாணவியை தரக்குறைவாகப் பேசிய கன்யாகுமார்... ரூ. 3000 அபராதம் விதித்த ஜே.என்.யூ... புதிய சர்ச்சை!
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்யா குமாருக்கு, மாணவி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதற்காக பல்கலைக்கழகத்தால் ரு. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப் பெற்றதாக புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் கன்யா குமார். இவர் பல்கலை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பியதாக தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கன்யாகுமாரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
கன்யாகுமார் கைது செய்யப்பட்டதற்கான முக்கிய வீடியோ ஆதாரமான, அந்த குறிப்பிட்ட வீடியோவின் காட்சிகளும், அதில் வரும் ஒலியும் மாறுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கன்யாகுமார் பாகிஸ்தானுக்கு ஆதரவாக, இந்தியாவிற்கு எதிராக பேசுவது போன்ற அந்த வீடியோ போலியாக உருவாக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார் கன்யா குமார்.
இந்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவி கமலேஷ் பரமேஸ்வரி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பல்கலைக்கழக உத்தரவு நகல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கடந்தாண்டு மாணவி ஒருவரிடம் கன்யாகுமார் தவறாக நடந்து கொண்டதாகவும், அதற்கு அபராதமாக ரூ. 3 ஆயிரம் கட்ட வேண்டும்' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த உத்தரவு உண்மை தான் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரிடம் கன்யா குமார் தவறாக நடந்து கொண்டதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கன்யாகுமாரின் உரைக்கு எதிராக இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் கமலேஷ் பரமேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது.