ராணுவம் குறித்து இழிவாக பேசியதால் ஆத்திரம்... பல்கலை வளாகத்தில் கன்யாகுமார் மீது தாக்குதல்
டெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் தலைவர் கன்னையா குமார் மீது, பல்கலைக்கழக வளாகத்திலேயே இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவரான கன்யா குமார், பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பியதாக தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கன்யாகுமாரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதற்கிடையே, கன்யாகுமார் கைது செய்யப்பட்டதற்கான முக்கிய வீடியோ ஆதாரமான, அந்த குறிப்பிட்ட வீடியோவின் காட்சிகளும், அதில் வரும் ஒலியும் மாறுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார் கன்யா குமார்.
இந்நிலையில், "தேசியவாதம்' தொடர்பாக கன்யா குமார், நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், திடீரென கன்யாகுமாரை தாக்கியுள்ளார்.
உடனடியாக அங்கிருந்த மற்ற மாணவர்கள் கன்யாகுமாரை அந்த இளைஞரிடமிருந்து காத்து, பாதுகாப்பாக அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். தாக்குதல் நடத்திய நபரிடம் கத்தி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர் ஒருவர் கூறுகையில், ‘‘தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக முதலில் அந்த நபர் சில வார்த்தைகளை பேசியதாகவும், பின்னர் அந்த தாக்குதலில் இருந்து கன்யா தப்பித்துக்கொண்டர்" எனத் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பெயர் விகாஷ் சவுத்ரி எனக் கூறப்படுகிறது. ராணுவம் குறித்து கன்யா குமார் தெரிவித்த கருத்துக்கு எதிராக அவர் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கன்யாகுமார், ‘ராணுவ வீரர்கள் ஜம்மு-காஷ்மீரில் பெண்களை பலாத்காரம் செய்கின்றனர்' என அதிரடியாக குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக கன்யாகுமார் மீது கான்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.