கனிமொழி, ராசாவைத் தொடர்ந்து திஹார் சிறையைக் கண்ட தினகரன்
திமுகவின் அ.ராசா, கனிமொழியைத் தொடர்ந்து திகார் சிறைக்கு போயுள்ளார் அதிமுகவின் டிடிவி தினகரன்.
டெல்லி: திஹார் சிறையில் அடைபடுவதிலும் திமுக - அதிமுக புதிய வரலாறு படைத்துள்ளன. அதாவது முதலில் திமுக தலைவர்கள் திஹார் சிறை கண்டனர். தற்போது அதிமுகவைச் சேர்ந்த தினகரன் சிறைக்குப் போயுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த வேறு எந்தக் கட்சியின் தலைவர்களும் திஹார் சிறைக்குப் போனதில்லை என்பது சுவாரஸ்யமானது.
தமிழக அரசியலை எடுத்துக் கொண்டால் திமுக - அதிமுக வைத் தவிர்த்து வேறு எந்த சக்தியும் இதுவரை வளரவில்லை, இவர்கள் இருவரும் மற்றவர்களை வளர விடவில்லை என்றும் கூட சொல்லலாம்.
சிறைக்குப் போவதில் ஒற்றுமை
தற்போது சிறைக்குப் போவதிலும் கூட இவர்களின் ஆதிக்கமே தொடர்கிறது. அதுதான் ஆச்சரியமான ஒற்றுமையாக உள்ளது. அதாவது திஹார் சிறைக்குப் போவதில் இவர்கள் இருவரும் போட்டி போட்டி சாதனை படைத்துள்ளனர்.
ராஜா, கனிமொழி
டெல்லி திஹார் சிறைக்குப் போவதில் முந்திக் கொண்ட கட்சி திமுகதான். 2ஜி வழக்கில் திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மற்றும் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் திமுகவினர்
இந்த இருவரில் ராசாதான் நீண்ட காலம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதாவது 15 மாதங்கள் இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கனிமொழியின் சிறைக்காலம் 6 மாதமாகும்.
டிடிவி தினகரன்
கனிமொழியும், ராசாவும்தான் தமிழகத்திலிருந்து கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட முதல் அரசியல்வாதிகள். இருவரும் திமுகவினர். தற்போது இவர்களைத் தொடர்ந்து அதிமுகவும் சிறைக்குப் போயுள்ளது. அதாவது தினகரன் புண்ணியத்தால்.
லஞ்ச வழக்கு
அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள தினகரனை தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் திஹார் சிறையில் அடைத்துள்ளனர். இது அவருக்கு முதல் சிறைவாசமாகும். அதுவும் தலைநகரில் சிறைவாசம்.
பெங்களூருவில் சசிகலா
திமுகவைத் தொடர்ந்து அதிமுகவின் தினகரன் திஹார் சிறைக்குப் போயிருப்பதன் மூலம் இதிலும் திமுக - அதிமுக ஆதிக்கமே இன்னும் தலைவிரித்தாடுவதை உணர முடிகிறது. அதை விட காமெடி, அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதே சமயம், பொதுச் செயலாளர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சுவாரஸ்யமானது.