அமித்ஷாவை கொல்ல திட்டமிட்டாராம் சந்திரபாபு நாயுடு... ஆந்திர பாஜக தலைவர் பகீர் புகார்
அமித்ஷாவை திருப்பதியில் வைத்து கொலை செய்ய சந்திரபாபு நாயுடு முயற்சித்தார் என்று ஆந்திர பாஜக தலைவர் பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அமராவதி: பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை திருப்பதியில் வைத்து கொலை செய்ய சந்திரபாபு நாயுடு சதி திட்டம் தீட்டியதாக ஆந்திர பாஜக தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா தெரிவித்துள்ளார்.
பாஜகவின் சார்பில் விஜயவாடாவில் நேற்று மெகா தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில பாஜக தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்களும் போலீஸாரும் பாஜக மேலவை உறுப்பினர் சோமு வீரராஜு மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். சந்திரபாபு நாயுடு அரசை பற்றி யாரேனும் கேள்வி கேட்டால் போதும் அவர்களுக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்கின்றனர்.
பிரதமர் மோடி
நாயுடு அரசு எல்லாவகையிலும் ஊழலில் ஈடுபட்டுள்ளது. ஊழல் விவகாரத்தை எழுத 300 பக்கங்கள் போதாது. சந்திரபாபு நாயுடு சிறப்பு விமானங்களில் பயணிக்கிறார், 7 நட்சத்திர விடுதிகளில் தங்குகிறார். வாஜ்பாயை சந்திரபாபு நாயுடு ஏமாற்றியதை அறிந்தே பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
திருந்தவில்லை
உங்கள் வயதை வைத்து நீங்கள் மாறியிருப்பீர்கள் என மோடி நினைத்தார். ஆனால் நீங்கள் ( நாயுடு) இன்னும் மாறவில்லை. திருப்பதி கோயிலில் அமித் ஷா சாமி கும்பிட குடும்பத்தினருடன் வந்திருந்தார். அப்போது ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேச கட்சியினரை வைத்து போராட்டம் நடத்தினார்.
டிஜிபி மாற்றி கூறினார்
அப்போது அமித்ஷாவின் வாகனத்தின் மீது கல் எறியப்பட்டதை அனைவரும் பார்த்தனர். போராட்டம் என்ற பெயரில் அவரை படுகொலை செய்ய சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார். ஆனால் டிஜிபி மலகொண்டையா தனது அறிக்கையில் ஏதோ குச்சி வந்து காரில் விழுந்ததாக கூறினார் என்று கண்ணா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஆதாரம் இருக்கிறதா
இதுகுறித்து தெலுங்கு சேத கட்சியின் ஆந்திர மாநில தலைவர் கிமிடி காலா வெங்கட ராவ் கூறுகையில், கண்ணா கூறிய குற்றச்சாட்டுகளை மறுக்கிறோம். அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா. அமித்ஷா திருப்பதிக்கு வந்தபோது எங்கள் கட்சி சார்பில் எந்த போராட்டத்துக்கு நாங்கள் அழைப்புவிடுக்கவில்லையே என்றார்.