சபரிமலை.. மறக்க முடியாத ஜெயமாலா... ஒரு பிளாஷ்பேக்!
சபரிமலைக்குள் நுழைந்ததாக நடிகை ஜெயமாலா பொய் கூறினார்.
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரம் என்றதும் கன்னட நடிகை ஜெயமாலாவை அவ்வளவு சீக்கிரம் மறந்து விடமுடியாது.
கேரளாவில் உள்ள கோயில்களில் ஏதாவது முக்கிய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றாலோ, அல்லது பராமரிப்பு பணிகள் என்றாலோ தேவபிரசன்னம் என்ற பூஜை செய்யப்படும்.
அதாவது கடவுளிடம் இதற்காக அனுமதி கேட்பதற்காக நடத்தப்படும் பூஜை இது. இந்த பூஜையில் சாதகமான நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே அந்த மாற்றங்களோ, நடவடிக்கையோ எடுக்கப்படும். இதுதான் நடைமுறை, ஐதீகம்!!
[வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு.. சபரிமலையில் அனைத்துப் பெண்களும் வழிபட சுப்ரீம்கோர்ட் அனுமதி!]
பரிகார பூஜைகள்
கடந்த 2006-ம் ஆண்டும் இப்படித்தான் உண்ணிகிருஷ்ண பணிக்கர் தலைமையில் தேவபிரசன்னம் நடத்தப்பட்டது. அப்போது அவர் சபரிமலை கோயிலில் இளம் பெண் ஒருவர் சுவாமியின் விக்ரகத்தை தொட்டு விட்டார். இதனால், ஐயப்பன் மிகவும் உக்கிரத்தில் இருக்கிறார். இந்த களங்கத்தை போக்க வேண்டுமானால் பரிகார பூஜைகளை உடனே நடத்த வேண்டும் என்றார்.
சபரிமலை நம்பூதிரிகள்
பணிக்கர் இப்படி சொன்னதும் கேரள நம்பூதிரிகள் நம்பவே இல்லை. ஒருக்காலும் இருக்காது, சபரிமலைக்குள் பெண்களே நுழைய அனுமதி இல்லாதபோது எப்படி விக்ரத்தை தொட வாய்ப்பு இருக்கும்? என்று விவாதித்தனர். ஆனால் மறுநாளே, கன்னட நடிகை ஜெயமாலா சபரிமலை கோயில் நிர்வாகத்துக்கு ஒரு கடிதத்தை பேக்ஸ் அனுப்பினார். அதில், தான் 18 வருடங்களுக்கு முன்பு சபரிமலையில் தரிசனம் செய்தது தான்தான் எனவும், அப்போது தனக்கு வயது 27 என்றும் தெரிவித்திருந்தார்.
மூல விக்ரகம்
கோயிலுக்குள் உள்ள கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறி கீழே விழுந்துவிட்டதாகவும், அப்போது தெரியாமல் மூல விக்ரத்தில் கை பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். ஜெயமாலாவின் இந்த கடிதத்தினால் கோயில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. 10 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயமாலா சபரிமலைக்கு போனது கேரளாவையே பரபரப்புக்கு உள்ளாக்கியது.
குட்டுகள் வெளிப்பட்டன
பின்னர் இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டது. போலீசார் தீவிரமாக இறங்க இறங்க ஒவ்வொரு குட்டாக வெளிப்பட்டது. முதலாவதாக, பணிக்கருக்கும், ஜெயமாலாவுக்கும் உள்ள நாள்பட்ட பழக்கம் அம்பலமானது. இரண்டாவதாக, ஜெயமாலா சொன்னது எல்லாம் பொய் என்று தெரியவந்தது. மூன்றாவதாக, சபரிமலைக்கு இப்படி ஒரு கடிதம் அனுப்பும்படி பணிக்கரே ஜெயமாலாவை கேட்டுக் கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. நான்காவதாக, பணிக்கரும், ஜெயமாலாவும் சேர்ந்து நாடகமாட காரணம், சபரிமலை கோயிலின் தந்திரியையும் அவரது குடும்பத்தினரின் பெயரையும் கெடுக்கவே என்பதும் தெரியவந்தது.
6 பேர் மீது வழக்கு
இதையடுத்து சபரிமலை கோயிலுக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், மத உணர்வை புண்படுத்தியதாகவும் கூறி பணிக்கர், நடிகை ஜெயமாலா, உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நீண்டகாலமாக நடைபெற்றது. பின்னர் ஜெயமாலாவுக்கு சாதகமாக முடிந்தது.
யாரும் தடுக்க முடியாது
சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவது குறித்து ஜெயமாலா பின்னர் கூறுகையில் "கால ஓட்டத்துக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும். அந்த வகையில் சபரிமலை என்றில்லை எந்தக் கோவிலுக்கும் பெண்கள் செல்ல வேண்டும். அதை யாரும் தடுக்கக் கூடாது. அதேசமயம், மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோவிலுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்" என்றார்.