கன்னட கொடியை அகற்றக் கோரி சிவசேனா போராட்டம் - ஸ்தம்பித்த கர்நாடக பார்டர்
கர்நாடகா: பெலகாவி மாவட்டத்தின் மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்றப்பட்ட கன்னட கொடியை அகற்றக் கோரி, சிவசேனா அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பெலகாவி மாவட்டம் யாருக்கு என்பது குறித்த கர்நாடகா - மகாராஷ்டிரா மாநிலங்கள் இடையேயான மோதல், காஷ்மீர் எல்லைப் பிரச்னையை விட மோசமாகிவிடும் போலிருக்கிறது.
கர்நாடகா - மராட்டிய எல்லையில் அமைந்துள்ள பெலகாவி மாவட்டத்தில் நிறைய மராட்டியர்கள் வசித்து வருகின்றனர் என்ற ஒரே காரணத்துக்காக, அம்மாவட்டம் எங்களுக்கு சொந்தம் என மராட்டியம் உரிமை கொண்டாட, 'அப்டிக்கா ஓடிப்போயிடு....' என்று கர்நாடகாவும் விடாப்பிடியாக சொந்தம் கொண்டாடி வருகிறது.
சமீபத்தில் கூட, பெலகாவியை மராட்டியத்துடன் இணைப்போம் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே, 2 மாதங்களுக்கு முன்பு பெலகாவியில் உள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு கன்னட அமைப்பினர் கன்னட கொடியை ஏற்றினர். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த சிவசேனா, கன்னட கொடியை அகற்றிவிட்டு அங்கு மராட்டிய கொடியை ஏற்றுவோம் என்று சூளுரைத்தது.
அதன்படி நேற்று, மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் இருந்து பல்வேறு வாகனங்களில் கிளம்பிய சிவசேனா தொண்டர்கள், கையில் மராட்டிய கொடியை ஏந்தியபடி பெலகாவி நோக்கி வந்தனர்.
இதையடுத்து, பெலகாவி-கோலாப்பூர் எல்லையில் உள்ள சின்னோலி சோதனைச் சாவடியில், 200க்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்களின் வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்த, சைடு கேப்பில் சிலர் மராட்டிய கொடியை கையில் ஏந்தியபடியே எல்லையைத் தாண்ட முயன்றனர்.
பிறகு, ஒருவழியாக சிவசேனா கட்சியினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால், பெலகாவி-கோலாப்பூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து ஸதம்பித்தது.