அமைச்சருக்கு எதிரான செய்தி: 2 கன்னட செய்தி சேனல்கள் 'கட்'!
பெங்களூரு: கர்நாடக மின்சார துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக செய்தி ஒளிபரப்புவதாக குற்றம்சாட்டி, கன்னடத்தில் நம்பர்-1 செய்தி சேனலாக உள்ள டிவி9 மற்றும் அதன் ஆங்கில செய்தி சேனலான நியூஸ்9 ஆகியவற்றை ஒளிபரப்ப கூடாது என்று கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் இவ்விரு சேனல் ஒளிபரப்பையும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கட் செய்துள்ளனர்.
பெங்களூரு அடுத்த கனகபுரா தொகுதி எம்.எல்.ஏவான டி.கே.சிவகுமார் அப்பகுதியில் சட்ட விரோத கிரானைட் தொழில் நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே மூத்த காங்கிரஸ் தலைவரும், ஏற்கனவே இருமுறை அமைச்சராக பதவி வகித்த அனுபவம்மிக்கவருமான டி.கே.சிவகுமாருக்கு தனது அமைச்சரவையில் சித்தராமையா இடம் தராமல் புறக்கணித்தார். ஊழல்வாதிகளுக்கு தனது அமைச்சரவையில் இடமில்லை என்றும் சித்தராமையா அறிவித்தார்.
ஆனால் டெல்லி சென்ற டி.கே.சிவக்குமார், சோனியா காந்தியை சந்தித்து பேசிய பிறகு, என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை, அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தின்போது சிவகுமாருக்கு 'பவர்புல்' மின்சார துறை அமைச்சர் பதவி கிடைத்தது.
இந்நிலையில், சிவகுமாருக்கும், கன்னடத்தில் முன்னணி செய்தி சேனலாக உள்ள டிவி9க்கும் நடுவே மோதல்கள் உருவாகின. தேர்தலின்போதே, சிவகுமாருக்கு எதிராக டிவி9 செய்திகளை ஒளிபரப்பி வந்தது. அமைச்சரான பிறகு மோதல் அதிகமாகியது.சிவகுமார் லஞ்சம் பெறுவதை ஸ்டிங் ஆபரேசன் மூலமாக வீடியோ எடுக்க சிறப்பு பெண் நிருபர்களை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தது டிவி9. ஆனால் டிவி ஆபீசில் இருந்தே யாரோ சிவகுமாருக்கு இந்த தகவலை போட்டுக் கொடுக்கவே, சிவகுமாரின் ஆட்கள் பெண் நிருபர்களை பிடித்து வைத்துக் கொண்டு அத்துமீறி வீட்டுக்குள் வந்ததாகவும், லஞ்சம் தர முயன்றதாகவும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் மீண்டும் சமீப காலமாக கிரானைட் மோசடி குறித்து டிவி9 மற்றும் அதன் ஆங்கில சேனல் நியூஸ்9 ஆகியவை செய்திகளை ஒளிபரப்பி வந்தன. இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார் சில தினங்களுக்கு முன்பு கர்நாடக கேபிள் டிவி ஆபரேட்டர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தின்போது, டிவி9 சேனலை கர்நாடகாவில் ஒளிபரப்ப விடக்கூடாது என்று உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை முதல் டிவி9 மற்றும் நியூஸ்9 சேனல்கள் கர்நாடகாவின் பெரும்பான்மை பகுதிகளில் ஒளிபரப்பாகவில்லை. 15 மணி நேரங்கள் ஆகியும் இன்னும் நிலைமை மாறவில்லை. இதைத் தொடர்ந்து டிவி9 சேனல், தனது லே-அவுட்டை முழுக்க கருப்பு நிறத்தில் மாற்றி, மீடியாவை பணிய வைக்க முயற்சி நடப்பது போன்ற கார்டூனுடன் தொடர்ந்து செய்தி ஒளிபரப்பி வருகிறது. சிவகுமார்தான் இந்த முடக்கத்திற்கு காரணம் என்று சேனல் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் பிரகலாத் ஜோஷி, பாஜக எம்.பி. ஷோபா கரந்தலாஜே மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவர்கள், கர்நாடக அரசின் போக்கிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீடியாக்கள் சார்பில் சித்தராமையா அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கைவிரித்தனர்.
கர்நாடக கேபிள் டிவி சங்க தலைவர் பத்ரிக்ராஜுவிடம் கேட்டபோது "டிவி9 சேனல் அதிகப்படியாக ஆந்திர சினிமா குறித்த செய்திகளைதான் காண்பிக்கிறது. கன்னடர்கள் நலனுக்காக எதையும் காண்பிக்கவில்லை. கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எதிராகவும் செய்தி வெளியிட்டுள்ளது. எனவேதான் கட் செய்துள்ளோம். அமைச்சர் உத்தரவு எதுவும் வரவில்லை" என்றார்.