பெங்களூர் மாநகராட்சியை பிரித்தால் தமிழர் ஆதிக்கம் வரும்.. கன்னட அமைப்புகள் எதிர்ப்பு!
பெங்களூரு: பெங்களூரு நகரை மூன்றாக பிரிக்க கூடாது என்று கன்னட அமைப்புகள் அரசை கேட்டுக்கொண்டுள்ளன. மீறி பிரிவினையை செயல்படுத்த முயன்றால் பந்த் நடத்த திட்டமிட்டுள்ளன.
நிர்வாக வசதிக்காக பெங்களூரு நகரை மூன்றாக பிரிக்க முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளார். இதற்கான சட்ட மசோதா பேரவையில் நிறைவேறிவிட்டது. மேலவையில் அந்த சட்ட திருத்தம் நிறைவேறியதும், சட்டம் அமலுக்கு வரும்.
கன்னடர்கள் அச்சம்
இந்நிலையில், பெங்களூருவை மூன்றாக பிரித்தால், தமிழர்கள், தெலுங்கர்கள் மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற அச்சம் கன்னடர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாஜக, மஜத போன்ற கட்சிகளும் தங்களது அச்சத்தை சட்டசபையில் தெரிவித்துள்ளன.
சொத்துவரி தரக்கூடாது
இதுகுறித்த விழிப்புணர்வு கூட்டத்துக்கு பல்வேறு கன்னட அமைப்புகள் இணைந்து பெங்களூருவில் ஏற்பாடு செய்திருந்தன. அப்போது பேசிய வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் "பெங்களூருவின் 198 வார்டிலும் கன்னட அமைப்பினர் பிரநிதிகளை போட்டியிட செய்ய வேண்டும். 50 வார்டுகளில் நாம் ஜெயித்தாலும், மாற்றத்தை கொண்டுவர முடியும். ஒருவேளை பெங்களூர் பிரிக்கப்பட்டால், நாம் சொத்து வரி கொடுக்க கூடாது" என்றார்.
வேறு மொழியினர் ஆள்வார்கள்
டாக்டர்.ராஜ்குமார் ரசிகர் சங்க தலைவர் சா.ரா.கோவிந்து கூறுகையில், முதல்வரை சில மாஜி ஐஏஎஸ் அதிகாரிகள் தவறான வழிகாட்டுதலுக்கு உட்படுத்திவிட்டனர். மாநகராட்சி பிரிக்கப்பட்டால், கன்னடர் அல்லாதவர்களும் மேயராகும் சூழ்நிலை உருவாகிவிடும். கன்னடர்களுக்கு அவர்களிடமிருந்து நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றார்.
தமிழர்கள் ஆதிக்கம்
பெங்களூரு தெற்கு, மத்தி, வடக்கு என மூன்று மாநகரங்களாக பிரிக்கப்பட உள்ளது. இதில் மத்திய பெங்களூருவில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தமிழர்களே. தெலங்கர்கள், உருது பேசுவோர்கள் தவிர்த்து சொற்ப எண்ணிக்கையிலேயே கன்னடர்கள் உள்ளனர். எனவே, மத்திய பெங்களூரு மாநகராட்சியில் தமிழர்கள் விரும்புவோரே மேயராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.