தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதா? அரசு அலுவலகத்தை சூறையாடிய கன்னட அமைப்பினர்
பெங்களூர் : தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள், விவசாயிகள் நீர்பாசன அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர் .
கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டத்தை கண்டித்து கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவின் ஷெட்டி தலைமையில் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள், கன்னட அமைப்பினர் மைசூர் அரண்மனை அருகில் உள்ள கர்நாடக நீர் பாசன தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (செவ்வாய்) காலை முதல் போராட்டம் நடத்தினர்.
ஒரு கட்டத்தில் அலுவலகத்தின் நுழைவாயிலை உடைத்து உள்ளே நுழைந்த விவசாயிகள் அலுவலகத்தில் இருந்த மேஜை நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர். இதனால் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
விவசாயிகள் போராட்டம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விவசாயிகளை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்களையும் மீறி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் மேலும் நிலைமை மோசமானதைத் தொடர்ந்து கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர். கடந்த வியாழக்கிழமை கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.