கலக்கும் கர்நாடக முதல்வர்.. ரயில், விமான நிலையங்களில் கன்னடத்துக்கே முன்னுரிமை: சித்தராமையா அதிரடி
கர்நாடக மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் கன்னட மொழிக்குத்தான் முதன்மை இடம் அளிக்கப்படும் என்று மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் கன்னட மொழிக்கு மட்டுமே முதன்மை இடம் அளிக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
பொதுவாக ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் ஆங்கிலம், இந்தி மொழிகளில் ஊர் பெயர், பிற தகவல்கள் என எழுதப்பட்டிருக்கும். ஆனால் கர்நாடகத்தில் கன்னடத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூருவில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் காவல் துறை அதிகாரி கணபதி தற்கொலை விவகாரத்தில் அமைச்சர் பதவியை கே.ஜே. ஜார்ஜ் ராஜினாமா செய்ய தேவையில்லை. குஷால் நகர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கின் படி சிபிஐயும் வழக்கு பதிவு செய்துள்ளது.
பல வழக்குகள் உள்ளன
கே.ஜே. ஜார்ஜ் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எதியூரப்பா கூறி வருகிறார். அவர் மீதே மோசடி, ஊழல் குற்றச்சாட்டுகள் ஏராளமாக உள்ளன. அதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் எதியூரப்பா கொடுத்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. அவர் மீதுள்ள வழக்குகளுக்கு பாஜக மாநில தலைவர் பதவியை எதியூரப்பா ராஜினாமா செய்வாரா.ஒருவர் மீது குற்றச்சாட்டு தெரிவித்துவிட்டாலே அவர் குற்றம் இழைத்தவர்களாக கருதமுடியாது. கே.ஜே.ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்ததும், அவரை பதவி விலக சொல்வது தேவையற்றது.
தற்கொலை வழக்கு
போலீஸ் அதிகாரி தற்கொலை வழக்கில் ஏற்கெனவே தானாக முன்வந்து தனது அமைச்சர் பதவியை ஜார்ஜ் ராஜினாமா செய்தார். அதே வழக்கில் மீண்டும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்துவது சரியானதல்ல.
முதன்மை இடம்
கர்நாடகத்தில் கன்னட மொழிக்கு தான் முதன்மையான இடம் இருக்க வேண்டும். கன்னட மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் இந்தி மொழியில் எழுதப்பட்டு இருந்தது அழிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி மொழி கன்னடம்
விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், மற்ற ரயில் நிலையங்களில் கன்னட மொழியே ஆட்சி மொழியாக இருக்கும். பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பயணிகளுக்கான விவரங்கள் அறிவிக்கப்படும் என்றார் அவர்.