கன்னிசாமிகளும் சரங்குத்தியும் - சபரிமலை யாத்திரையின் சடங்குகள்
எரிமேலியில் பேட்டைத் துள்ளிய கன்னிசாமிகள் தாங்கள் கொண்டுவரும் மரத்தாலான வில், வேல், சரம் போன்றவற்றை சரங்குத்தியில் உள்ள ஆலமரத்தில் குத்திவைத்து வணங்குகிறார்கள்.
சபரிமலை: ஐயப்பனை காண சபரிமலைக்கு செல்லும் கன்னி சாமிகள் சரங்குத்தியில் போய் தங்கள் வருகையை உணர்த்தும் விதமாக அங்குள்ள ஆலமரத்தில் சரக்கோலினை குத்தி வைத்து விட்டு கறுப்பு நாடாவை கட்டி வைப்பார்கள். இதைப்பார்க்கும் மஞ்சமாதா கன்னிசாமியின் வருகையை உணர்ந்து கொள்வார் என்பது ஐதீகம்.
ஐயப்பனுக்கு மாலையணிந்த பக்தர்கள், கருப்பு நிற ஆடையணிந்து வரும் பக்தர்கள் முகங்களில் வண்ணவண்ணப் பொடிகளைப் பூசிக்கொண்டு, பம்பை, உருமி முதலான வாத்தியக் கருவிகளை இசைத்தபடி, 'சாமி திந்தக்க தோம் தோம்... ஐயப்பா திந்தக்க தோம் தோம் என்று உற்சாகமாக ஆடுவார்கள். எரிமேலியில் பேட்டைத்துள்ளுவது ஐயப்ப பக்தர்கள் செய்யும் மிக முக்கியமான சடங்கு.
புலிப்பால் கொண்டு வர காட்டுக்குள் சென்ற மணிகண்டன் மகிஷி என்ற அரக்கியை வதம் செய்தார். இந்த நிகழ்வை நினைத்து ஐயப்ப பக்தர்கள் பேட்டைத்துள்ளி கொண்டாடுவதாக ஐதீகம். எரிமேலியில் பேட்டைத் துள்ளல் என்பது மகிஷியைக் வதம் செய்த பிறகு மணிகண்டன் ஆடிய ஆட்டம். இதையே நாம் ஐயப்ப வழிபாடாக இன்றைக்குப் பின்பற்றி வருகிறோம்.
இந்தப் பேட்டைத் துள்ளல் வைபவத்தில், எல்லா சாமிகளும் ஆடுவார்கள். கன்னிசாமி என்பவர் நிச்சயமாக ஆடவேண்டும்.
முதன்முறையாக ஐயப்பனை காண மலைக்கு வருபவர் கன்னிசாமி என்றழைக்கப்படுகிறார். இந்தக் கன்னிசாமிகள் ஆடி முடித்ததும் சரக்கோலும் கருப்பு நாடாவும் கொண்டு செல்வார்கள். சரங்குத்தி என்ற இடத்தில் உள்ள மரத்தில் குத்தி விட்டு கறுப்பு நாடாவை மரத்தடியில் வைத்து விட்டு செல்வார்கள். இது கன்னி சாமிகள் செய்ய வேண்டிய மிக முக்கியமான சடங்கு.
சோமவார அமாவாசை நாளில் அரசமரத்தை வலம் வந்தால் வேண்டிய வரம் கிடைக்கும்
சபரிமலைக்கு கன்னிசாமி வந்திருக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். பிரம்மச்சாரி ஐயப்பனை திருமணம்
செய்து கொள்ள வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கும் மஞ்சள்மாதாவிற்கு கன்னிச்சாமி ஐயப்பனை காண வந்திருக்கிறார் என்பதை இதன் மூலம் உணர்த்தலாம்.
மஞ்சள்மாதாவுக்கும் மணிகண்ட சுவாமிக்கும் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தமே இதுதானே. எந்த ஆண்டு என்னை தரிசிக்க கன்னிச்சாமி வரவில்லையோ அந்த ஆண்டில் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றுதானே மஞ்சள்மாதாவிற்கு கூறியுள்ளார் ஐயப்பன்.
எனவே ஐயப்பனுக்காக காத்திருக்கும் மஞ்சள்மாதாவுக்குத் தெரியப்படுத்தும் விதமாக, சரக்கோலுடனும் கருப்பு நாடாவுடன் வந்து சரங்குத்தியில் தங்களின் வருகையை தெரியப்படுத்துகிறார். இங்கு வந்து பார்க்கும் மஞ்சள் மாதா ஏக்கத்துடன் திரும்பி சென்று விடுவாராம்.
சரங்குத்தி கடந்தால் வருவது சபரிமலை சாஸ்தாவின் பொன்னு பதினெட்டாம்படிகள். இந்த பதினெட்டு படிகளைக் கடந்து சன்னிதானத்தில் தவநிலையில் இருக்கும் ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள், தாங்கள் கடந்துவந்த வலிகள், கஷ்டங்களை எல்லாம் மறந்து சாமியே சரணம் ஐயப்பா... என்று எழுப்பும் சரணகோஷத்தில் மலையே அதிரும்.
ஐயப்பனை கண்டதில் மனம் நிறைந்த பக்தர்கள் காடு மலை கடந்து கஷ்டங்கள் இருந்தாலும் மீண்டும் மீண்டும் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து வருவது இதனால்தான். இந்த ஆண்டு ஐயப்பனை காண முடியவில்லையே என்ற கவலை வேண்டாம் இன்னமும் நாட்கள் இருக்கின்றன. ஐயப்பன் தரிசனம் உண்மையான பக்தர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.