பில்லி சூனியம்: குழந்தை பாக்கியம் பெற 6 வயது சிறுமியை கொன்று நுரையீரலை அகற்றிய கொடூரம்
தனக்கு குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்பதற்காக 6 வயது சிறுமியை கொன்று நுரையீரலை எடுத்து பூஜை செய்துள்ளனர் சில கொடூரர்கள். இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நிகழ்ந்துள்ளது.
கான்பூர்: சிறுமிகள் பலாத்காரம் செய்து கொல்லப்படும் சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிகரித்து வருகிறது. கான்பூர் மாவட்டத்தில் ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர்கள் கொடூரமாக கொலை செய்து சிறுமியின் உடலில் இருந்து நுரையீரலை தோண்டி எடுத்துள்ளனர். குழந்தை பிறக்க வேண்டும் என்று மந்திர பூஜை செய்வதற்காக சிறுமி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள் இந்த கால கட்டத்திலும் இருக்கத்தான் செய்கின்றனர். வட மாநிலங்களில் பில்லி சூனியம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அதற்கு சாட்சியாகவே இந்த கொடூர கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினமும் கூட. இந்த நாளில்தான் கான்பூர் மாவட்டம் கட்டம்பூரைச் சேர்ந்த ஒரு சிறுமி மாயமானார். பெற்றோர்களும், உறவினர்களும் தேடி வந்த நிலையில் சிறுமியின் சடலமே சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமி கொலை ஏன்
இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சிறுமியை கொன்று நுரையீரலை தோண்டி எடுத்து பூஜை செய்துள்ளதாக தெரிவித்தனர். சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய அங்குல் குரில், பீரன் ஆகியோரை கைது செய்தனர்.
மூட நம்பிக்கை கொலை
இந்த கொலைக்கு சூத்திரதரியாக செயல்பட்டவர் பரசுராம் குரில். பரசுராம் ஆரம்பத்தில் காவல்துறையை தவறாக வழிநடத்த முயன்றார். காவல்துறையினர் தங்களின் பாணியில் விசாரிக்கவே, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பரசுராமுக்கு பல ஆண்டுகாலமாக குழந்தை பிறக்கவில்லை.
குழந்தைக்காக கொலை
குழந்தை வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் யோசித்த அவர் பில்லி சூனியம் செய்தால் குழந்தை பிறக்கும் என்று நம்பினார். அவர் தனது மருமகன் அன்குல் மற்றும் அவரது நண்பர் பீரன் ஆகியோரிடம் ஒரு சிறுமியைக் கடத்தி, நுரையீரலை அகற்றி கொண்டு வரும் படி கூறினார். இதற்கு அவர் தேர்வு செய்தது ஐப்பசி அமாவாசை நாள்.
தீபாவளி நாளில் கடத்தல்
தீபாவளி பண்டிகை தினத்தன்று சிறுமி விளையாடிக்கொண்டிருந்த போது குடிபோதையில் இருந்த குற்றவாளிகள் இருவரும் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். அதே வேகத்தோடு கொலை செய்து சிறுமியின் நுரையீரலை அகற்றி பரசுராமிடம் கொடுத்தனர்.
மனைவியும் கைது
சிறுமியை கடத்தி கொலை செய்ய தூண்டிய பரசுராம் கைது செய்யப்பட்டார். அவரது மனைவிக்கும் இந்த சம்பவம் குறித்து தெரிந்திருந்தும் இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்ததால், அவரும் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடும் தண்டனை
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விரைவாக தண்டனை வழங்கப்படும் வகையில் இந்த வழக்கு விரைவான நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ .5 லட்சம் நிதி உதவி வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.