உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.12.5 லட்சம் இழப்பீடு கிடைக்கப்போகிறது
உத்தரப் பிரதேச மாநில கான்பூர் அருகே ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 12.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய, மாநில அரசுகளும், ரயில்வே துறையும் அற
கான்பூர்: உத்தரப் பிரதேச மாநில கான்பூர் அருகே ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 12.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய மாநில அரசுகளும், ரயில்வே துறையும் அறிவித்துள்ளன. மேலும், இந்த விபத்து குறித்து வடக்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்தவும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.
இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. இதில், சம்பவ இடத்தில் இருந்து 2 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் தேஹத் மாவட்டத்தில் உள்ள புக்ரயன் அருகே நடந்த இந்த விபத்தில் இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டன. அதில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலாரூ.50 ஆயிரமும்,இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். இத்தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இவ்விபத்தில் பலியானவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகமும் அறிவித்துள்ளது.
இதேபோல், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவும் ரயில் விபத்தில் பலயானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயமுற்றவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமுற்றவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் அறிவித்துள்ளார்.
எனவே, இவ்விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மொத்தத்தில் தலா ரூ.12.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். மேலும், காயமுற்றவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் கிடைக்கும் என தெரிகிறது. இந்த விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து பிகார் தலைநகர் பாட்னாவை நோக்கிச் சென்ற இந்தூர்-பாட்னா விரைவு ரயில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே புக்ராயன் என்ற இடத்தில் திடீரென தடம் புரண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது.
அந்த ரெயில் பெட்டியின் சக்கரங்களில் விநோத சப்தம் வந்ததாகவும், அதனை ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் அலட்சியம் செய்ததாகவும் பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்த தகவல் அறிந்து வேதனை அடைந்ததாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் தேவையான உதவிகளை உத்தரப் பிரதேச அரசு செய்யும் என்று தாம் நம்புவுதாகவும் பிரணாப் கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.