கான்பூர் துயரம்... சிதைந்த பெட்டிகளுக்குள் நொறுங்கிய இதயத்துடன் அப்பாவைத் தேடும் புதுமணப்பெண்!
திருமணத்திற்காகச் சென்ற புதுப்பெண் ஒருவர், கான்பூர் ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்து, கண்ணீரோடு நொறுங்கிய ரயில் பெட்டிகளுக்கிடையே தன் தந்தையை தேடி வருகிறார்.
கான்பூர்: திருமணத்திற்காகச் சென்று கொண்டிருந்த போது கான்பூர் ரயில் விபத்தில் சிக்கிய புதுப்பெண் ஒருவர், நொறுங்கிய ரயில் பெட்டிகளுக்கிடையே தன் தந்தையை கண்ணீரோடு தேடி வரும் காட்சி பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் புக்ரையான் என்ற இடத்தில் பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 14 பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று மோதியதில் பெட்டிகள் உருக்குலைந்து போயின.
சின்னாபின்னமான பெட்டிகளில் இருந்து இதுவரை 100க்கு அதிகமான உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. நொறுங்கிச் சிதைந்த பெட்டிகளுக்குள் இருந்து உடல்களை மீட்கும் பணிகளில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க உடன்பயணித்த உறவுகளைத் தேடி மக்கள் கண்ணீரோடு அலைந்து வரும் காட்சியும் அங்கு காணப்படுகிறது. அவர்களில் ஒருவர் தான் 20 வயதான ரூபி குப்தா.
வரும் 1ம் தேதி இவருக்கு திருமணம். எனவே தனது தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களுடன் அல்மார் நோக்கி விபத்தில் சிக்கிய ரயிலில் பயணம் செய்துள்ளார் ரூபி. அப்போது தான் எதிர்பாராதவிதமாக இவர் பயணம் செய்த ரயில் பெட்டியும் தடம் புரண்டது. இதில், ரூபிக்கு தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது உடன்பிறப்புகளுக்கும் காயம் ஏற்பட்டது.
ஆனால், இந்த விபத்தில் அவரது தந்தை ராம் பிரசாத் குப்தாவைக் காணவில்லை. எனவே, அவரை ரூபியும் அவரது உடன் பிறப்புகளும் கண்ணீரோடு தேடி வருகின்றனர்.
சிலர் ராம் பிரசாத் குப்தாவை மருத்துவமனையில் பார்த்ததாகவும், வேறு சிலரோ அவரை பிணவறையில் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள ரூபி, தொடர்ந்து நம்பிக்கையுடன் தனது தந்தையைத் தேடி வருகிறார்.
இந்த விபத்தில் திருமணத்திற்காக தான் கொண்டு வந்த நகைகள், உடைகள் என பலவற்றை ரூபி இழந்துள்ளார். ஆனால், தன் தந்தையை எப்படியும் உயிரோடு பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் அவரைத் தீவிரமாக பல்வேறு இடங்களில் தேடி வருகிறார் ரூபி.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "எனது திருமணம் திட்டமிட்டபடி நடக்குமா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், நான் இப்போது என் தந்தையை கண்டுபிடித்தே ஆக வேண்டும். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.