தேசதுரோக வழக்கு... ஹர்திக் படேலுக்காக உச்சநீதிமன்றத்தில் ஆஜராகிறார் காங். மூத்த தலைவர் கபில் சிபல்!
டெல்லி: குஜராத் அரசு தொடர்ந்துள்ள தேசத் துரோக குற்றச்சாட்டு வழக்கை ரத்து செய்யக் கோரும் படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேலின் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் ஆஜராக உள்ளார்.
குஜராத்தில் செல்வாக்குமிக்க முற்பட்ட படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; இல்லை எனில் இடஒதுக்கீட்டு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கிளர்ச்சியில் ஈடுபட்டவர் ஹர்திக் படேல்.
தற்போது ஹர்திக் படேலை கைது செய்துள்ள குஜராத் அரசு அவர் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்துள்ளது. இதனை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஹர்திக் படேலின் தந்தை வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், போலீசாரை படுகொலை செய்யுமாறு படேல் சமூக இளைஞர்களை ஹர்திக் படேல் தூண்டிவிட்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. அவர் மீதான தேசத் துரோக குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருக்கிறது என்று கூறி அந்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த வழக்கில் ஹர்திக் படேலுக்காக குஜராத் உயர்நீதிமன்றத்தில், குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டத் துறையின் தலைவர் பி.எம். மங்குகியா ஆஜரானார். இந்த நிலையில் ஹர்திக் மீதான தேசத் துரோக குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது ஹர்திக் படேலுக்காக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபல் ஆஜராகி வாதாட உள்ளார்.
குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸும் ஹர்திக் படேலும் கை கோர்த்திருப்பது ஆளும் பா.ஜ.க.வை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால்தான் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்காமல் குஜராத் அரசு தாமதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.