ரூபாய் நோட்டு விவகாரத்தில் பெரும் ஊழல் "நீதி விசாரணை" தேவை - கபில் சிபல்
ரூபாய் நோட்டு வாபஸ் பெறபட்ட விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பை: ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது எனவும், இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை எனக் கூறி புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார். அது தொடர்பாக நீதி விசாரணை தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கபில் சிபல், ரூ.15.15 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.14.97 லட்சம் கோடிகள் மட்டுமே வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளன. அப்படியென்றால் கருப்புப் பணம் முறையான கணக்குக்குள் வந்து விட்டது என அர்த்தமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆளும் பாஜக அரசு மற்றும் வங்கிகளின் சதிச் செயல்கள் இல்லாமல் இவை அரங்கேற வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் கருப்புப்பணம் இல்லையென்றால், கருப்புப்பணம் மீதான நடவடிக்கை எங்கே? எனவும், பண மதிப்பிழக்க நடவடிக்கையை பிரதமர் மோடி எந்த வகையில் நியாயப்படுத்தி பேசி வருகிறார்? எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பிய கபில் சிபல், இது தொடர்பாக நீதி விசாரணை தேவை என்றும் வலியுறுத்தினார்.
கஷ்டத்தை 50 நாட்கள் தாங்கிக் கொள்ளுங்கள், அதன்பின்னர் நிலைமை சீராகவில்லை என்றால் எந்த தண்டனையையும் ஏற்றுக் கொள்ளத் தயார் என பிரதமர் கூறியதை குறிப்பிட்டுக் காட்டிய கபில் சிபல், தற்போதும் நிலைமை சீராகவில்லை. எனவே, எங்கு வைத்து, எந்த மாதிரியான தண்டனையை பிரதமர் ஏற்றுக் கொள்கிறார் என்பதை அவர் அறிவிக்க வேண்டும் எனவும் சாடியுள்ளார்.