கர்நாடகா போலீஸ் இணையதளத்தை "ஹேக்" செய்த பாகிஸ்தான் கும்பல்!
பெங்களூர்: கர்நாடக மாநில காவல் துறையின் இணையதளத்தை பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஹேக் செய்துள்ளனர்.
கர்நாடக மாநில காவல் துறையின் இணையதளம் www. ksp.gov.in. அந்த இணையதளம் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஹேக் செய்யப்பட்டது. ஹேக்கர்கள் காவல்துறை இணையதளத்தில் இருந்தவற்றை அழித்துவிட்டு பாகிஸ்தானின் தேசிய கொடியை அப்லோடு செய்தனர்.
மேலும் உங்கள் பாதுகாப்பை நினைத்து வெட்கப்படுங்கள் என்று ஹேக் செய்த பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தவிர பைசல் 1337 என்று எழுதப்பட்டிருந்தது. இணையதளத்தை ஹேக் செய்தது பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் குழு என்றும் அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் கர்நாடக அரசை அதிலும் குறிப்பாக உள்துறை அமைச்சகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துவங்கினர். ஐபி அட்ரஸை வைத்து பார்க்கையில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஹேக் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இணையதளம் சீர்செய்யப்பட்ட போதிலும் ஹேக்கிங் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.