கரீனா கபூரை முன்வைத்து 'மதமாற்ற' பிரசாரத்தை முன்னெடுக்கும் வி.ஹெச்.பி!
டெல்லி: பாலிவுட் நடிகை கரீனா கபூரை முன்வைத்து முஸ்லிம்களை திருமணம் செய்த இந்து பெண்களை தாய் மதத்துக்கு மாற்றும் பிரசாரத்தை விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பெண்கள் அமைப்பான துர்கா வாக்னி முன்னெடுத்து வருகிறது.
பாலிவுட் நடிகர் சயீப் அலி கானை 2012ஆம் ஆண்டு கரீனா கபூர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கரீனா கபூர் இஸ்லாம் மதத்துக்கு மாறாததால் அவரது திருமணம் செல்லாது என்று சில இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் துர்கா வாகினி அமைப்பின் ஏடான ஹிமாலய் தவானியின் முகப்பு அட்டையில் கரீனா கபூர் படத்தை போட்டு அவரது முகத்தின் ஒரு பகுதியில் இஸ்லாமிய பெண்களைப் போல் பர்கா அணிவித்தும் மற்றொரு பகுதியில் இந்து பெண்களைப் போல குங்குமம் வைத்தும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள துர்கா வாகினி அமைப்பின் நிர்வாகி ரஜினி துக்ரல் கூறுகையில், கரீனா கபூர் ஒரு பிரபலம் என்பதால் அவரது படத்தைப் போட்டோம். முஸ்லிம்களைதிருமணம் செய்த 16 இந்து பெண்கள் தாய் மதத்துக்கு மாற்றுமாறு எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களில் இருவரை தாய் மதத்துக்கு மாற்றியுள்ளோம். ஒருவருக்கு மறுமணமும் நடந்துவிட்டது.
மதமாற்றங்களால்தான் நாடு இந்தியா, பாகிஸ்தானாக பிரிந்தது. லவ் ஜிஹாத்தில் தவறுதலாக சிக்கும் பெண்கள் மீண்டும் தாய் மதத்துக்கு மாறுவது என்பது அவர்களுடைய உரிமை. ஆனால் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்த மறுமதமாற்றத்தை சிலர் எதிர்க்கின்றனர் என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் சயீப் அலி கான், இது மிக மோசமான செயல். கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.
கரீனா கோர்ட்டுக்குப் போகலாம்- வி.ஹெச்.பி
இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரகாஷ் சர்மா, கரீனா கபூரின் படத்தை பயன்படுத்தியதில் எந்த ஒரு சர்ச்சையும் இல்லை.
இது அந்த ஏட்டின் ஆசிரியருக்கும் கரீனாவுக்குமான பிரச்சனை. இதில் ஏதாவது பிரச்சனை என்று கரீனா கபூர் உணர்ந்தால் அவர் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறியுள்ளார்.