கார்கில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய ராணுவத் தலைமைத் தளபதி பிக்ரம் சிங்!
-ரிச்சா பாஜ்பாய்
டிராஸ்: இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங், இன்று கார்கில் மாவட்டம் டிராஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.
கார்கிலில் 1999ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடந்து 15 வருடங்களாகிறது. இதையொட்டி டிராஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கார்கில் போர் நினைவுச் சின்னத்திற்கு இன்று வருகை தந்தார் ராணுவத் தளபதி பிக்ரம் சிங்.
அங்கு அவர் கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்து நாட்டைக் காத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ராணுவத் தலைமைத் தளபதி பொறுப்பிலிருந்து ஜூலை 31ம் தேதி பிக்ரம் சிங் ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கெளரவமாக உணர்கிறேன்
இதுகுறித்து ஒன்இந்தியா சிறப்புச் செய்தியாளர் ரிச்சா பாஜ்பாயிடம் பிக்ரம் சிங் கூறுகையில், நான் ஜூலை 31ம் தேதி ஓய்வு பெறவுள்ளேன். அதற்கு முன்பாக இங்கு வந்து அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக, கெளரவமாக கருதுகிறேன்.
ராணுவம் மாறியுள்ளது
கார்கில் போருக்குப் பின்னர் நமது ராணுவம் பெருமளவில் மாறுதல்களைக் கண்டுள்ளது. இன்னும் சில சவால்கள் நம்மை விட்டுப் போகவில்லை. இருப்பினும் எந்தவிதமான சவாலையும் சமாளிக்கும் வகையில் நமது ராணுவம் தீரத்துடன் உள்ளது.
பாகிஸ்தான் திருந்தவில்லை
ஆனால் போருக்குப் பின்னும் கூட பாகிஸ்தா் திருந்தவில்லை. தொடர்ந்து ஊடுறுவலில் ஈடுபட்டபடிதான் உள்ளனர். போர் நிறுத்த மீறல்களும் தொடரத்தான் செய்கின்றன.
இரவு பகலாக காக்கும் தீரர்கள்
ஆனால் இதை இரவு பகலாக நமது வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தபடி உள்ளனர். அவர்களை வணங்குகிறேன்.
பாதுகாப்புக்கு உத்தரவாதம்
இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக நான் நாட்டு மக்களுக்குச் சொல்ல விரும்புவது நமது ராணுவத்தின் கையில் நமது மாவீரர்களின் கையில் நமது நாடும், மக்களும் மிகவும் பாதுகாப்புடன் உள்ளனர் என்பதைத்தான் என்றார் பிக்ரம் சிங்.