நன்றி சொல்லவே வார்த்தை இல்லையே... இந்திய ராணுவம் குறித்து நெகிழும் டிராஸ் மக்கள்!
-ரிச்சா பாஜ்பாய்
டிராஸ்: 1999ம் ஆண்டு கார்கில் போரின்போது பாகிஸ்தான் ராணுவத்தின் கொடும் தாக்குதலில் சிக்கி உருக்குலைந்து போன கார்கிலின், டிராஸ் நகரம் இன்று மீண்டெழுந்துள்ளது. தங்களை அப்போதும் சரி, இப்போதும் சரி தொடர்ந்து காத்து வரும் இந்திய ராணுவத்திற்கு டிராஸ் மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறுகின்றனர்.
கார்கில் மாவட்டத்திற்குட்பட்ட டிராஸ் பகுதியைத்தான் பாகிஸ்தான் ராணுவம் அதிகமாக குறி வைத்துத் தாக்கியது. இதில் டிராஸ் நகரம் பெரும் சேதத்திற்குள்ளானது.
போர் உக்கிரமடைவதற்கு முன்பு இப்பகுதியில் அதிக அளவில் இந்திய ராணுவத்தினர் இல்லை. இதை பயன்படுத்திக் கொண்டு மிருகத்தனமாக தாக்கியது பாகிஸ்தான். ஆனால் இந்திய ராணுவம் கடுமையாக போராடி பாகிஸ்தானிய ஊடுறுவல்காரர்களை விரட்டியடித்து டிராஸ், பாகிஸ்தான் கைகளுக்குள் போகாமல் காத்து விட்டது.
தீவிர விழிப்புணர்வு
இன்று டிராஸ் பகுதியை தாய்க்கோழி தனது குஞ்சைக் காப்பது போல விழிப்புணர்வுடன் காத்து வருகிறது இந்திய ராணுவம். பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்களின் நிழல் கூட படாத அளவுக்கு இன்று டிராஸ் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ளது.
மகிழ்ச்சியில் மக்கள்
வழக்கமாக ராணுவ நடமாட்டம் அதிகம் இருந்தால் அதை மக்கள் அசவுகரியமாகவே உணர்வார்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நமது ஒன்இந்தியா செய்தியாளர், டிராஸ் பகுதி மக்களிடம் பேசியபோது அது தவறு என்பது புரிய வந்தது. இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தை டிராஸ் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
எங்கு பார்த்தாலும் ராணுவம்
டிராஸ் பகுதியில் நமது ராணுவத்தினர் பெருமளவில் உள்ளனர். ஒவ்வொரு இடத்திலும் ராணுவத்தினரி்ன் நடமாட்டம் உள்ளது. தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இதை அசவுகரியமாக மக்கள் எடுத்துக் கொள்வதில்லை. மாறாக, ராணுவத்தின் இந்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறுகிறார்கள்.
குடும்பத்தைக் காத்த ராணுவம்
குலாம் முகம்மது என்ற ஒரு முதியவர். அவருக்கு இப்போது 75 வயதாகிறது. போர் நடந்தபோது அவருக்கு வயது 65. அப்போது போரினால் இவரும், இவரது குடும்பமும் வீட்டை விட்டு ஓட நேரிட்டது. இவரது வீடு டலோலிங் பிரிவில் மலை அடிவாரத்தில் உள்ளது. போரின்போது இவர் தனது குடும்பத்தினருடன் ராணுவத்தினர் புடை சூழ அவர்களுடன் தங்க நேரிட்டது.
ராணுவத்தால்தான் நிம்மதியாக தூங்குகிறோம்
இதுகுறித்து குலாம் முகம்மது கூறுகையில், அன்று ராணுவம்தான் என்னையும், எனது குடும்பத்தையும் காப்பாற்றியது. இன்று நாங்களும், இந்த கிராம மக்களும் நிம்மதியாக இரவில் தூங்க முடிகிறது என்றால் அதற்கு நமது வீரர்கள்தான் காரணம். இதற்காக நாங்கள் ராணுவத்திற்கு நன்றி சொல்கிறோம் என்றார் நெகிழ்ச்சியுடன்.
ராணுவத்திற்குச் சாப்பாடு போட்ட குலாம்
போரின்போது கிராமமே காலியாகிப் போனது. ஆனால் குலாம் மட்டும் துணிச்சலுடன் தங்கியிருந்து ராணுவ வீரர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்து கூடவே இருந்தாராம்.
சுற்றுலா சுறுசுறுப்பு
அதேபோல 20 வயதான ஜாகிர் கான் என்ற இளைஞர் கூறுகையில், இன்று இங்கு சுற்றுலாப் பயணிகள் தைரியமாகவும், பயமின்றியும் வந்து செல்ல நமது ராணுவத்தின் பாதுகாப்பே காரணம். தொடர்ந்து எங்களையும், இந்த கிராமத்தையும் ராணுவம் பாதுகாத்து வருகிறது. அவர்களது பணி அளப்பறியது என்றார் ஜாகிர் கான்.
கிராமத்து மக்களோடு மக்களாக
கிராமத்து மக்களோடு மக்களாக ராணுவமும் பல பணிகளைச் செய்து வருகிறது. பனிக்காலத்தில் இங்கு பனிக் கட்டிகள் குவிந்து கிடக்கும். அப்போது மக்களோடு சேர்ந்து ராணுவத்தினரும் அதை அகற்றுவார்களாம். மேலும் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை கிராம மக்களுக்குக் கிடைக்கவும் வழி செய்வார்களாம். மேலும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் கூட ராணுவம் ஏற்படுத்தித் தருகிறதாம்.
ராணுவம் இல்லாமல் நாங்கள் இல்லை
அதை விட முக்கியமாக இங்குள்ள மக்கள் கூறியது.. ராணுவம் இங்கிருந்து அகற்றப்பட்டால் கூடவே நாங்களும் இந்த இடத்தை விட்டுப் போய் விடுவோம் என்பதுதான்.