நரகமாக இருந்து நகரமாக மாறிய காஷ்மீரின் டிராஸ்- ஒன்இந்தியாவின் நேரடி ரிப்போர்ட்!
- ரிச்சா பாஜ்பாய்
டிராஸ், ஜம்மு காஷ்மீர்: 1999ம் ஆண்டு கார்கில் போருக்கு முந்தைய காலகட்டம் வரையில், நரகமாக இருந்த டிராஸ் பகுதியை தற்போது நகரமாக மாற்றி அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது ஜம்மு காஷ்மீர் மாநில அரசு. சுற்றுலா வளர்ச்சியால் தேசிய நீரோட்டத்தில் கலந்துள்ளனர் அப்பகுதி மக்கள்,
ஆடு மேய்ப்பவர்
காஷ்மீர் எல்லையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் பாகிஸ்தான் ராணுவம் நம் பகுதியில் சுற்றித்திரிகிறது என்று இந்திய ராணுவத்துக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலை தொடர்ந்து ராணுவ வீரர்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது பாகிஸ்தான் அத்துமீறி இந்திய எல்லைக்குள் கால் வைத்ததை பார்த்து ரத்தம் கொதித்தனர்.
பள்ளத்தாக்கில் பயங்கரம்
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினரை நோக்கி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு அவர்களும் தாக்குதல் நடத்த கார்கில் யுத்தம் தொடங்கியது. அமைதியான அந்த பள்ளத்தாக்கில், துப்பாக்கி சத்தத்துடன் மரண ஓலமும் சேர்ந்து மலைகளில் எதிரொலித்தது. டிராஸ் பகுதியில் மக்கள் தனி தீவுகளாக சிக்கிக்கொண்டனர். மாநிலத்தின் பிற பகுதிகளுடன் தொடர்பு துண்டித்தது.
இந்தியா வெற்றி
கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று, இந்திய தாயின் தலையில் வாகை மலரை சூடியதும்தான் தாமதம், வளர்ச்சி பணிகள் இப்பகுதியில் முடுக்கிவிடப்பட்டன. கார்கில் போர் நடந்து பதினைந்து ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், இப்போது டிராஸ் பகுதி முற்றிலும் மாறிப்போயுள்ளது.
கண்முன்னே வளர்ச்சி
தொலைபேசி தொடர்பே அளிக்கப்படாத அந்த பகுதியில் தற்போது அனைவர் கரங்களிலும் செல்போன்கள் தவழுகின்றன. டிடிஹெச் பொருத்தப்படாத வீடுகளை பார்ப்பதே அரிது. அகண்டவரிசை இணையதள சேவையை மக்கள் ஆர்வமுடன் பயன்படுத்துகின்றனர். 4 துவக்க பள்ளி மட்டுமே இருந்த இந்த பகுதியில் தற்போது கல்லூரிகளும், மருத்துவமனைகளும் வானளாவி நிற்கின்றன.
சுற்றுலா முக்கிய காரணம்
டிராஸ் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் இப்பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. இணையதள கபே நடத்திவரும் ஜாகீர் என்ற வாலிபர் கூறுகையில், 1999ம் ஆண்டுக்கு முன்புவரை நாங்கள் தனிமையை உணர்ந்து வந்தோம். இப்போது எப்போதும் சுற்றுலா பயணிகள் வருவதால் நாட்டின் பிற பகுதி மக்களுடனும் நாங்கள் தொடர்பில் இருப்பதை போன்ற உணர்வை பெறுகிறோம்.
வேலை வாய்ப்பு
உள்ளூர் கடைக்காரர் சஃபீக் அகமது நம்மிடம் பேசுகையில் "சுற்றுலா துறை வளர்ச்சியால் இங்குள்ள மக்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தலமான லடாக்கை இணைக்கும் பகுதியாக டிராஸ் அமைந்துள்ளதால் எப்போதுமே சுற்றுலா பயணிகள் வருவது சகஜமான ஒன்றாகியுள்ளது" என்றார்.
டிராஸ் நரகம்
'பால்டிக் டிராஸ்' அதாவது 'டிராஸ் நரகம்' என்று உள்ளூர் மொழியில் அழைக்கப்பட்டு வந்த டிராஸ் இப்போது, சொர்க்கமாக காட்சியளிக்கிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை-1 இந்த பகுதியை இணைக்கிறது. இதைத்தான் சஃபீக் அகமதும் நம்மிடம் தெரிவித்தார். "உண்மைதான்; 15 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதி நரகமாகத்தான் கருதப்பட்டது. இனியும் அப்படிச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்" என்றார் பெருமிதம் பொங்க. ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் வளர்ச்சி திட்டங்கள்தான் தங்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துள்ளதாக டிராஸ் பகுதி மக்கள் பூரிப்புடன் சொல்கிறார்கள்.