"எல்.ஓ.சி." பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
கார்கில்: இந்தியாவின் எல்லைப் பகுதியின் பாதுகாப்பு நிலைகள் (Forward posts) குறித்து ஒவ்வொரு இந்தியரும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். காரணம், எதிரிகளை நமது நாட்டுக்குள் அடியெடுத்து வைக்காமல் முதலில் தடுப்பவர்கள் இந்த நிலைகளில் உள்ள வீரர்கள்தான். இந்த இடத்தில் நாம் சுதாரிப்பாக இல்லாவிட்டால் நாட்டுக்குள் பல கிலோமீட்டர்களுக்கு எதிரிகள் ஊடுறுவி விடுவார்கள். எனவே இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு ராணுவ வீரரும் தங்களது உயிரை துச்சமென மதித்து, நாட்டையும், நமது மண்ணையும் நம்மையும் பாதுகாக்கும் தீரமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள பாதுகாப்பு நிலைகள் குறித்து நாம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். காரணம், இந்த பகுதியில்தான் நமக்கு தினந்தோறும் தலைவலியைக் கொடுத்துக் கொண்டுள்ளனர் நமது எதிரிகள்.
இந்தியாவின் அதிக பதட்டமான பகுதியும் இதுதான் என்றாலும் மிகையாகாது. நமது வாசகர்களுக்காக கார்கில் பகுதியில் உள்ள பாதுகாப்பு நிலைகள் உள்ள பகுதிக்கு ஒன்இந்தியாவின் சிறப்புச் செய்தியாளர் சென்று வந்து பல தகவல்களைச் சேகரித்துக் கொடுத்துள்ளார். அதுகுறித்து இங்கு பார்ப்போம்.
1971ல் கைப்பற்றிய நிலை
கார்கில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியிலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பாதுகாப்பு நிலையில் நாம் இருக்கிறோம். இந்த போஸ்ட்டை, 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரின்போது, பாகிஸ்தான் படையினரிடமிருந்து மீண்டும் கைப்பற்றியது இந்தியா. மிகவும் முக்கியமான இடம் இது.
எதிரிகளை எளிதில் கண்காணிக்கலாம்
இந்த பாதுகாப்பு நிலையானது மிகவும் முக்கியமானது. காரணம் இந்த இடத்திலிருந்து பாகிஸ்தான் பகுதியில் நிலவும் நடவடிக்கைகள் நமக்குத் தெளிவாகத் தெரியும். அங்குள்ள நடமாட்டத்தையும் எளிதில் கண்காணிக்க முடியும். சின்னச் சின்ன அசைவுகளை கூட நாம் எளிதாகப் பார்க்க முடியும்.
போகும் பாதை கடினமானது
இந்த பாதுகாப்பு நிலையை அடைவது என்பது மிகவும் கடினமானது. பல சவால்களுக்குரிய பயணமாக இது அமையும். அதேசமயம், இங்கிருந்து மீண்டும் திரும்பி வருவது என்பது அதை விடக் கடினமாகும்.
கண்ணைக் கூட இமைக்க முடியாது
இந்த பாதுகாப்பு நிலையில் பணியில் இருப்பவர்கள் கண்ணை ஒரு விநாடி கூட சிமிட்டக் கூடாதாம். காரணம், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை எதிர்புறம் உள்ள எதிரிகள் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். நாம் ஒரு விநாடி அசந்தோம் என்றாலும் கூட ஊடுறுவல்கார்ரகள் எதையும் செய்து விட முடியும். நகர முடியாது, அசைய முடியாது.. படு விழிப்போடு இருந்தாக வேண்டும்.
நாட்டுக்கே இதுதான் முக்கியமான நிலை
நமது நாட்டின் பாதுகாப்பில் இந்த பாதுகாப்பு நிலைதான் மிக மிக முக்கியமானதும் கூட என்றும் சொல்கிறார்கள். இந்த இடத்தின் வழியாக எதிரிகள் நமது நாட்டுக்குள் மிக எளிதாக ஊடுறுவி விட முடியும் என்பதால் இங்கு பாதுகாப்புப் பணி என்பது மிக மிக முக்கியமானது. அதி உயர் பாதுகாப்பு அம்சமும் கூட.
ஒரே ஒரு கிராமம்
இந்த பாதுகாப்பு நிலைக்கு அருகே ஒரு ஒரு கிராமம் உள்ளது. இங்கு 40 முதல் 50 பேர்தான் வசிக்கிறார்கள். அவர்கள் இந்த கிராமத்தின் பார்மபரிய குடிமக்கள். இங்கிருந்துஇடம் பெயர அவர்கள் விரும்பவில்லை.
பாதுகாப்புக்கு சில ராணுவத்தினர்
இவர்களின் பாதுகாப்புக்கும் ராணுவமே நிறுத்தப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவருக்கும் கூட ஆபத்து நேரிடாமல் நமது ராணுவத்துடன் எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள் என்று ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
மண் குடிசைகள்
இந்த கிராமத்தில் உள்ள மண்குடிசைகள் அனைத்துமே ராணுவத்தால் கட்டிக் கொடுக்கப்பட்டவையாகும். ராணுவத்தினருக்கு இங்கு சில அறைகளும் உள்ளன. அதில் சாப்பாட்டு மேசை, சிறிய சமையல் அறை, டிவி பார்க்கும் அறை உள்ளன. இதை ஓய்வெடுக்க ராணுவத்தினர் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
கடும் குளிரும்.. கடும் வெப்பமும்
இப்பகுதியில் கோடை காலத்தில் கடுமையான வெப்பம் நிலவும். குளிர் காலத்திலோ கடுமையான குளிர் நிலவும். எதையும் தாங்கும் இதயம் மற்றும் உடலுடன் இங்கு ராணுவத்தினர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பகலில் கடும் வெப்பம்.. இரவில் கடும் குளிர்
பகல் நேரத்தில் இங்கு 35 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துமாம். இரவிலோ நடுங்க வைக்கும் குளிர் அடிக்குமாம். இரண்டையும் ராணுவ வீரர்கள் ஒரே மாதிரியாக எதிர்கொள்கிறார்கள்.
கிரிக்கெட் கொண்டாட்டம்
இந்திய அணி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றபோது, இங்குள்ள நமது படையினரும், கிராம மக்களும் சேர்ந்து விளக்கேற்றி கொண்டாடினார்களாம். முன்பு பட்டாசுகள் வெடிப்பார்கள். இப்போது பாதுகாப்பு கருதி அதைத் தடை செய்து விட்டதால் விளக்கேற்றிக் கொண்டாடுகிறார்கள்.
மகிழ்ச்சி - துக்கம் - சந்தோஷத்தில் பங்கு
இங்குள்ள கிராமமக்கள் ராணுவத்தினருடன் தங்களது மகிழ்ச்சி துக்கம், சந்தோஷம் என எல்லாவற்றையும் பங்கிட்டுக் கொள்கின்றனர். ராணுவத்தினரும், கிராமத்தினரும் ஒரே குடும்பமாக பழகுகின்றனர்.