கார்கில் போர்.. தடம் மாறா தடயங்களின் ஒரு நேரடி புகைப்பட தொகுப்பு
-ரிச்சா பாஜ்பாய்
டிராஸ்: நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்ய துணிவின்றி கொல்லைப்பக்கமாக வீட்டுக்குள் நுழைவதைப்போல காஷ்மீரின் டிராஸ் பகுதியில் 1999ல் ஊடுருவியது பாகிஸ்தான் ராணுவம். அப்போது காஷ்மீரின் சில பகுதிகளையும் கைப்பற்றிவிட்டதாக கூறி மார்தட்டியது. வெகுண்டெழுந்த இந்திய ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியை தாங்க முடியாமல், புறமுதுகு காட்டி ஓடினர் பாகிஸ்தான் ராணுவத்தினர்.
கார்கில் போர் என அழைக்கப்படும் இந்த வீர வரலாறு நடந்து 15 ஆண்டுகளாகியுள்ள நிலையில், ஒன்இந்தியா, கார்கிலின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை தனது கேமராவில் பதிவு செய்து எடுத்து வந்துள்ளது. அந்த இடங்கள் உங்கள் பார்வைக்கு...
பதுங்கிய பாகிஸ்தான்
பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய வீரர்களின் அசகாய தாக்குதலில் இருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள பதுங்க ஏற்படுத்திய டுலோலிங் டாப்பில் அமைத்திருந்த பதுங்கு குழி இதுதான்.
குண்டு தடம் மாறவில்லை
கண்காணிப்புக்காக குட்டி கோபுரத்தை அமைத்துக் கொண்டு இந்திய ராணுவத்தின் மீது இதில் இருந்துதான் பாகிஸ்தான் ஊடுருவல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு, டைகர் மலை பகுதியில் நின்றபடி இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. தாக்குதலை தாங்க முடியாமல் விட்டால்போதும் என்று இந்த கோபுரத்தைவிட்டுவிட்டு தலைதெறிக்க ஓடினர் பாகிஸ்தான் ராணுவத்தினர். இப்போதும்கூட இந்த கண்காணிப்பு கோபுரத்தில் இந்திய ராணுவத்தின் துப்பாக்கிகளில் இருந்து புறப்பட்டு வந்த குண்டுகளின் தடம் ஆழ பதிந்துள்ளது.
உத்தரவு மையம்
இமய மலையின் 13 ஆயிரம் அடி உயரத்தில் உறைய வைக்கும் குளிரில் அமைக்கப்பட்ட இந்த போஸ்ட் இந்திய ராணுவத்தினரின் சந்திப்பு புள்ளியாக இருந்தது. இங்கிருந்துதான் ஊடுருவல்காரர்களை எப்படி வீழ்த்த வேண்டும் என்று திட்டம் வகுக்கப்பட்டு அது செயலாக்கம் செய்யப்படும்.
வெற்றி மாலையாகிய மலை
இந்திய வீரர்களை போல தலைநிமிர்ந்து நிற்கும் இந்த மலை சிகரம் முழுவதையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இறுதியில், தாயகம் காக்க துணிந்து நின்ற வீரர் கூட்டம் முன்பு, தாக்குபிடிக்க முடியாமல், மண்டியிட்டு மலையை, வெற்றி மாலையாக கொடுத்து விட்டு ஓடினர்.
ஒற்றையடி பாதையில் ஓடி போனார்கள்
பாகிஸ்தானில் இருந்து இந்திய மண்ணில் அந்த நாட்டு ராணுவம் ஊடுருவிய ஒற்றையடி பாதை இதுதான். போரின் இறுதியில் இதே வழிப்பாதையில் பாகிஸ்தான் ராணுவம் புறமுதுகிட்டு ஓடியதற்கும் இப்பாதைதான் சாட்சி.
உருளும் பள்ளத்தாக்கு
சூட்டிங் ஸ்பாட் போல காட்சியளிக்கும் இந்த உருளும் பள்ளத்தாக்கையும் பாகிஸ்தானியர்கள் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு வெற்றிக்கொடியை நாட்டியது இந்திய ராணுவம்.