இன்று கார்கில் வெற்றி திருநாள்.. அன்று முஷ்கோ பள்ளத்தாக்கில் நிகழ்ந்தது என்ன?
-ரிச்சா பாஜ்பாய்
கார்க்கில் : ஜூலை 26 கார்கில் போரின் வெற்றித் திருநாள்! கார்கில் யுத்தம் முடிந்து ஆண்டுகள் பதினைந்து உருண்டோடி விட்டாலும் நேற்று நடந்ததுபோல் இன்றும் நம் கண்முன்னால் நிழலாடுகிறது.
இந்தியா- பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ளது கார்கில் !. திரும்பும் திசையெல்லாம் உயர்ந்து நிற்கும் மலை முகடுகள்... அதை சுற்றி போர்த்தப்பட்டிருக்கும் பனித் திரைகள். பார்க்க பார்க்க பரவசப்படுத்தும் இந்த கார்கில் ஸ்ரீநகரில் இருந்து 205 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
ஸ்ரீநகரையும் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மட்டும்தான் கார்கில் வழியாக செல்கிறது. கரடு முரடான மலை பிரதேசத்தில் இது ஒன்றுதான் போக்குவரத்துக்கான ஒரே வழி.
கடல்மட்டத்தில் இருந்து இருந்து 16 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில்தான் இந்தியா- பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இந்த கோட்டின் இருபகுதியிலும் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன.
இந்தப்பகுதியில் குளிர்காலத்தில் வெப்பம் மைனஸ் 48 டிகிரிக்கு மாறி விடும். அந்த பகுதியையே பனிக்கட்டிகள் சூழ்ந்து விடும். எனவே அந்த குளிர்காலத்தில் இரு நாட்டு ராணுவத்தினரும் தங்கள் பாசறைகளை அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவார்கள்.
குளிர்காலம் முடிந்ததும் மீண்டும் ராணுவம் தங்கள் நிலைகளுக்கு திரும்பும். அதை தொடர்ந்து ராணுவத்தின் ரோந்தும் தீவிரமாகும். இதுதான் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் வழக்கம்.
சிம்லா ஒப்பந்தம்
1972ஆம் ஆண்டு போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தில், குளிர்காலத்தில் இரு நாட்டு ராணுவத்தினரும் பாசறைக்குத் திரும்ப வேண்டும் என்ற முக்கிய அம்சம் உள்ளது. ஆனால் 1999ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் பாசறைக்குத் திரும்ப வில்லை.
இந்தியாவைத் தாக்கத் திட்டம்
கார்கில் பகுதிக்குள் ஊடுருவி ஸ்ரீநகர்- லே நெடுஞ்சாலையை துண்டித்து விட்டால் அங்கிருந்து இந்தியாவை எளிதில் தாக்கலாம். இதன் மூலம் காஷ்மீரை கைப்பற்ற முடியும் என்று நினைத்த பாகிஸ்தான் அதற்கான திட்டத்தை வகுத்தது.
லாகூர் ஒப்பந்தம்
காஷ்மீர் பிரச்சினையை அமைதியாக தீர்த்து கொள்ளும் வகையிலும் 1999 பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
லாகூருக்குப் பேருந்து
அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு பஸ் பயணத்தை தொடங்கி வைத்து லாகூருக்கு பேருந்தில் சென்று வந்தார். இந்தியா அன்புடன் நேசக்கரம் நீட்டியது. ஆனால் பாகிஸ்தான். ஒரு புறம் நட்பு பாராட்டி கொண்டே திரைமறைவில் ஊடுருவல் வேலைகளை செய்து கொண்டிருந்தது.
முஷ்கோ பள்ளத்தாக்கில் முஷராப்
1999-ம் ஆண்டு குளிர்காலத்தில் படைகள் கீழே இறங்குவதற்கு பதில் அங்கேயே முகாமிட்டு இருந்தன. அப்போதைய பாகிஸ்தான் ராணுவத்தலைமைத் தளபதி பர்வேஸ் முஷராப், முஷ்கோ பள்ளத்தாக்குப் பகுதிக்கு வந்து பாகிஸ்தான் ராணுவத்தினருடன் சதி ஆலோசனை மேற்கொண்டார்.
ஊடுருவிய பாகிஸ்தான்
சத்தமில்லாமல் ராணுவ தளவாடங்களை கொண்டு வந்து குவித்தது பாகிஸ்தான். இந்தியப்படைகள் கீழே இறங்கி விட்டது அவர்களுக்கு சாதகமாகிவிட்டது. உடனடியாக கார்கிலில் ஊடுருவி எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றனர். 130 சதுர கிலோ மீட்டர் முதல் 200 சதுர கிலோ மீட்டர் வரை ஊடுருவி விட்டனர்.
வசப்படுத்திய பாகிஸ்தான்
முஷ்கோ பள்ளத்தாக்கு, டிராஸ் அருகில் உள்ள மார்போலா மலை முகடுகள், கார்கிலுக்கு அருகில் உள்ள கக்சர், சிந்து நதியின் கிழக்கு பகுதியில் உள்ள படாலிக் பகுதி, எல்லையோரத்தில் உள்ள சோர்பாட்லா பகுதி, சியாசின் பனி மலைக்கு தெற்கே அமைந்துள்ள துர்தோக் ஆகிய பகுதிகளை முற்றிலுமாக தங்கள் வசப்படுத்தி விட்டன.
கொலை செய்த பாகிஸ்தான்
இந்திய ராணுவ நிலைகளை கைப்பற்றியதோடு புதிதாக ராணுவ தளங்களையும் அமைத்து விட்டனர். மலை முகடுகளில் மாடு மேய்க்க சென்றவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடமாட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மாடு மேய்ப்பவர்கள் சொல்லிய தகவலை கேட்டதும் உஷார் அடைந்த இந்திய ராணுவம் படாலிக் பகுதிக்கு ரோந்து சென்றது. அவர்களில் 5 பேரை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர்.
போர்பிரகடனம் அறிவிப்பு
அடுத்த சில நாட்களில் அங்கிருந்து கார்கில் ராணுவ கிடங்கை குறி வைத்து குண்டு வீசப்பட்டதில் ராணுவ கிடங்கு சேதமடைந்தது. அதன் பிறகுதான் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி இருக்கிறது என்பதை உறுதி செய்தனர். முதுகில் குத்திய பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட நினைத்த அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தாக்குதலுக்கு உத்தரவிட்டார்.
முஷரப் போட்ட விதை
முஷ்கோ பள்ளத்தாக்குப் பகுதிக்கு முஷராப் வந்து சென்ற சிலநாட்களிலேயே போர் தொடங்கியது. 2 லட்சம் வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கார்கில் போர்களத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது. முதலில் ஸ்ரீநகர் - லடாக் தேசிய நெடுஞ்சாலையை போரடி மீட்டனர். பாகிஸ்தான் வசம் இருந்த ஒவ்வொரு சிகரத்தையும் நமது ராணுவத்தினர் மிகப்பெரிய போராட்டத்துக்கு இடையே கைப்பற்றினார்கள்.
பின்னங்கால் பிடறியில் பட ஓடிய பாகிஸ்தான்
இந்திய வீரர்களின் ஆவேச தாக்குதலில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் ஒவ்வொன்றாக இழந்து வந்த பாகிஸ்தான் உலக நாடுகளின் எச்சரிக்கையால் படைகளை விலக்கி கொள்ள முன் வந்தது. இதற்கான அறிவிப்பை நவாஸ் ஷெரீப் வெளியிட்டார். 1999ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் இந்திய சார்பில் அறிவிக்கப்பட்டது.