"விஜய் திவஸ்": கார்கில் போர் 17ம் ஆண்டு வெற்றி தினம்: உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
டெல்லி: கார்கில் போர் 17ம் ஆண்டு வெற்றி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு டெல்லி அமர்ஜவான் ஜோதியில் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் ராணுவ தளபதிகள் அஞ்சலி செலுத்தினர்.
நாடு முழுவதும் பல பகுதிகளில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன. சென்னை போர் நினைவுச் சின்னம் பகுதியில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
17 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை ஆக்ரமித்த பாகிஸ்தானை, இந்திய ராணுவம் அடித்து விரட்டி மீண்டும் கைப்பற்றி வெற்றிக் கொடி நாட்டிய தினம் இன்று. "போரில் வெற்றி பெற்றாலும் விலைமதிக்க முடியாத நமது ராணுவ வீரர்களின் உயிரை இழக்க வேண்டியதாயிற்று.
நாட்டு மக்களுக்காக இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், காயமடைந்த வீரர்களை கவுரவிக்கும் விதமாகவும் ஜூலை 26ம் தேதி, கார்கில் நினைவு தினம் 'விஜய் திவாஸ்' ஆக கடைப்பிடிக்கப்படுகிறது.
கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று 17ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளது. கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 17வது ஆண்டு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மோடி டுவிட்டராஞ்சலி
We recall with pride, the firmness demonstrated by India’s political leadership in 1999, which ensured a decisive victory in Kargil.
— Narendra Modi (@narendramodi) July 26, 2016
கார்கில் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி உள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் " நேசத்திற்காக, உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். ‘கார்கில் தியாகிகள் நினைவு தினம்' நமது தேசத்தின் ராணுவ வீரர்களின் துணிச்சல், பலம் மற்றும் தியாகங்களை நமக்கு நினைவுப்படுத்துகிறது, என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை போர் நினைவுச் சின்னம்
சென்னையில் தலைமைச் செயலகம் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை தீவுத்திடல், தக்ஷின் பாரத் ஏரியா ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினென்ட் ஜெனரல் ஜெக்பீர் சிங், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நேவல் ஏரியா பிளாக் ஆபீசர் கமாண்டிங் ரியர் அட்மிரல் அலோக் பட்நகர், இந்திய கடலோர காவற்படை மண்டலம் (கிழக்கு) கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜென்ரல் ராஜன் வர்கோத்ரா, ராணுவ உயர் அலுவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றிய ஜெயலலிதா
கார்கில் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் 3 தினங்களுக்கு முன்பே 23ம் தேதி நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, ராணுவ உயர் அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.