அன்று மண்ணைக் காக்க போராடினார்.. இன்று மகனைக் காக்க பணத்துக்காக போராடும் கார்கில் வீரர்!
ஹைதராபாத்: கார்கிலைக் காக்க அன்று பனிச் சிகரகத்தில் எதிரிகளுடன் நடந்த போரில் மோதினார். இன்று தனது 7வயது மகனைக் காக்க போராடி வருகிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மனோஜ் குமார் சிக்தர்.
ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறான் சிக்தரின் 7 வயது மகன் மிஹிர். அவனது மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான பணம் இல்லாமல் சிரமத்தில் உள்ளார் சிக்தர்.
இதுகுறித்து நியூஸ் மினிட் இணையம் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 10 மாதமாக தீவிர சிகிச்சையில் உள்ளான் மிஹிர். அவனுக்கு அரிய வகை மரபணு நோயான நியூரோபைப்ரோமடோசிஸ் Neurofibromatosis (Type 1) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது உடலெங்கும் வலியை ஏற்படுத்தி, தோல்கள், மூளை மற்றும் உடம்பெங்கும் நரம்புகளில் கட்டிகளை உருவாக்கும்.
இந்த அரிய வகை நோயிலிருந்து தனது மகனைக் காக்க மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக ஓடிக் கொண்டிருக்கிறது சிக்தரின் குடும்பம். இத்தனை அவஸ்தையிலும் தன்னைப் பார்க்க வருவோரைப் பார்த்து அழகாக சிரித்தபடி வரவேற்கிறான் சிறுவன் மிஹிர். அவனால் பேச முடியாது. காரணம், மூச்சு விடுவதற்கு வசதியாக அவனது பேச்சுக் குழலை எடுத்து விட்டனர். தனது கையில் சிறிய டிரம்மை வைத்துள்ளான் சிறுவன். அதை அடித்து அடித்து சைகை மூலம் பேசுகிறான் மிஹிர்.
50,000 பேரில் ஒருவருக்குத்தான் இந்த வியாதி வருமாம். தொடர் மருத்துவ சிகிச்சை இதற்குத் தேவைப்படும். பெரும் பொருட் செலவும் ஆகும். இதுகுறித்து சிக்தர் கூறுகையில், 10 மாதங்களுக்கு முன்புதான் இந்தப் பிரச்சினையை கண்டறிந்தோம். அன்று முதல் எனது மகன் சிகிச்சையில் இருந்து வருகிறான்.
இந்த வலியிலும் கூட அவனால் எப்படி சிரிக்க முடிகிறது என்று தெரியவில்லை. தற்போது அவனுக்கு செயற்கை சுவாசம்தான் தந்து கொண்டிருக்கிறோம். அவனது உடலில் ஒரு பக்கம் பக்கவாதம் வந்து பாதித்துள்ளது. மூளையில் உள்ள நரம்புகள் இறுக ஆரம்பித்துள்ளன. முதுகெலும்பிலும் பாதிப்பு வந்துள்ளது. மூளையில் ரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது. சிறுநீரக குழாயிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவனிடமிருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன். நலிவையும் பொருட்படுத்தாமல் போராடுவது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டேன். எனது மகன் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளான். எல்லையில் நான் பணியாற்றியபோது பல உயிரிழப்புகளைப் பார்த்துள்ளேன். உயிரின் மதிப்பு இவ்வளவுதான் என்று அப்போது நினைத்தேன். ஆனால் இன்று எனது மகன் போராடுவதைப் பார்க்கும்போது உயிருக்கு உள்ள அர்த்தம் எனக்குப் புரிந்தது என்றார் சோகம் கலந்த புன்னகையுடன்..
மிஹிரின் மருத்துவ செலவுகளுக்காக தங்களது அத்தனை பணத்தையும் சிக்தர் குடும்பம் செலவிட்டு விட்டது. ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐசியூவில் இருந்து வருகிறான் மிஹிர். மருத்துவமனையில் முன்பு ஒரு நாளுக்கான செலவு ரூ. 4500 ஆக இருந்தது. இந்த செலவை, 120 நாட்களுக்கு முன்னாள் ராணுவத்தினருக்கான மத்திய சுகாதாரத் திட்டத்தின் மூலம் சமாளித்து விட்டனர்.
தற்போது சுகாதாரக் காப்பீடு முடிந்து விட்டதால், தினசரி கட்டணம் ரூ. 8500 ஆக உயர்ந்துள்ளதாம். இதனால் சிக்தர் தம்பதி பெரும் குழப்பமடைந்துள்ளது. தங்களுக்கு உதவ வேண்டி பேஸ்புக்கில் ஒரு பக்கம் திறந்துள்ளனர் சிக்தர் குடும்பத்தினர். தங்களது மகன் குறித்த வீடியோவையும் அதில் அப்லோட் செய்துள்ளனர்.
செகந்திரபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் தற்போது மிஹிர் சிகிச்சை பெற்று வருகிறான். அவனுக்கு சிகிச்சைக்குத் தேவையான பணம் மிகப் பெரியதாக உள்ளது. தாராள மனம் படைத்தவர்களின் உதவிக்காக மிஹிரும், அவனது தாய் தந்தையும் காத்திருக்கிறார்கள்...!