பாஜகவின் கோட்டையான போபாலை கைப்பற்ற காங்கிரஸ் பலே திட்டம்.. நடிகை கரீனா கபூரை களமிறக்க திட்டம்?
போபால்: பாஜகவின் கோட்டையான போபாலை கைப்பற்ற அந்த தொகுதியில் நடிகை கரீனா கபூரை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைப்பது, பாஜக அரசை எப்படி தோற்கடிப்பது, அரசை எப்படி தக்க வைத்து கொள்வது உள்ளிட்ட வியூகங்களை தத்தம் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது இன்னும் ஒரு படி மேலே போய் மற்ற கட்சிகளின் கோட்டையாக உள்ள தொகுதிகளை தங்கள் வசமாக்கிக் கொள்ளவும் கட்சிகள் முயல்கின்றன. அதன்படி மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபால், பாஜகவின் கோட்டையாக உள்ளது.
வியூகம்
இங்கு நீண்ட நாட்களாக பாஜக வேட்பாளரே வெற்றி பெற்று வருகின்றனர். மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து விட்டது. இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது போபாலை கைப்பற்ற வேண்டும் என காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.
காங்கிரஸ் திட்டம்
அதன்படி பிரபலமான ஒருவரை போபால் தொகுதியில் நிறுத்தினால் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர். இதனால் பிரபல இந்தி நடிகையான கரீனா கபூரை களத்தில் இறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
தோல்வி
கரீனா கபூர் மறைந்த கிரிக்கெட் வீரர் பட்டோடியின் மருமகளாவார் (சைஃப் அலியின் மனைவி). இதனால் பட்டோடி குடும்பத்தின் போபால் வாரிசுகளில் ஒருவராக கரீனா கருதப்படுகிறார். 1991-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கிய பட்டோடி வெற்றி பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் தோல்வியை சந்தித்தார்.
கணக்கு
இதைத் தொடர்ந்து பட்டோடி குடும்பத்தை சேர்ந்த யாரும் போபால் தொகுதியில் போட்டியிடவில்லை. தற்போது மாநிலத்தில் பல்வேறு அரசியல் சூழல்கள் மாறியுள்ளதால் கரீனாவை நிற்க வைத்தால் நிச்சயம் போபால் காங்கிரஸுக்கு கைமாறிவிடும் என்பது அக்கட்சியின் கணக்கு.