நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார்.. சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கர்ணன் தரப்பில் தகவல்
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மன்னிப்பு கேட்க கர்ணன் தயாராக இருப்பதாக அவரது தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் தெரிவித்ததற்காக கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தானாக முன்வந்து பதிவு செய்துள்ள உச்சநீதிமன்றம், அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளது.
இதனிடையே கர்ணன் எங்கேயுள்ளார் என தெரியாமல் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து கர்ணன் தரப்பில், சுப்ரீம்கோர்ட்டை இன்று அணுகிய அவரது வழக்கறிஞர் ராஜகோபால், அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனைக்கு தடை கோரும் மனுவை தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி கேஹர் முன்னிலையில் இந்த மனுவை அவர் தாக்கல் செய்தார்.
ஆனால், இந்த மனுவை அவசரமாக விசாரித்து, கைது உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனிடையே, கர்ணனின் வழக்கறிஞர் கூறுகையில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க கர்ணன் தயாராக இருப்பதாகவும், ஆனால், அவரது வேண்டுகோளை, நீதிமன்ற பதிவாளர் ஏற்க மறுப்பதாகவும் புகார் தெரிவித்தார். 1971ம் ஆண்டின் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ், அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளானவர் மன்னிப்பு கேட்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஆனால், எதையுமே சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை என்பதால், கர்ணனை தேடும் பணியில், கொல்கத்தா காவல்துறை ஈடுபட்டு வருகிறது.