கர்நாடக மாநில அதிமுக பொருளாளர் ராஜேந்திரன் வீடு, நிறுவனங்கள் மீது கல்வீச்சு !
பெங்களூரு: கர்நாடக மாநில அதிமுக பொருளாளர் ராஜேந்திரனின் வீடு, வணிக வளாகம் மற்றும் நிறுவனங்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. தமிழர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது.
நேற்று மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள், 30-க்கும் மேற்பட்ட லாரிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தமிழர்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பதட்டம் நிலவுகிறது.
இந்நிலையில், பெங்களூரு குமாரசுவாமி லே அவுட் பகுதியில் உள்ள கர்நாடக மாநில அதிமுக பொருளாளர் ராஜேந்திரனின் வீடு, வணிக வளாகம், நிறுவனங்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அவரின் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.