விடாது கருப்பு.. புதிய உத்தரவிலும் திருத்தம் கோரிய கர்நாடகா- 'நொச்சு'ன்னு குட்டிய சுப்ரீம்கோர்ட்!
டெல்லி: தமிழகத்துக்கு செப்டம்பர் 20-ந் தேதி வரை நாள்தோறும் 12,000 கனடி நீரை திறந்துவிட என்ற புதிய உத்தரவிலும் திருத்தம் கோரியது கர்நாடகா தரப்பு. ஆனால் தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது; அதுவே இறுதி உத்தரவு என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு நாள்தோறும் 15,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்று கடந்த 5-ந் தேதி கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி கர்நாடகா நீரை திறந்துவிட்டது.
அதே நேரத்தில் இந்த உத்தரவை மாற்றி அதாவது 6 நாட்களுக்கு மட்டும் நீரை திறக்க உத்தரவிட வேண்டும் என்று புதிய மனுவை கர்நாடகா தாக்கல் செய்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தது.
கர்நாடகாவின் திருத்தம் கோரும் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது கர்நாடகாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், தமிழகத்துக்கு வரும் 20-ந் தேதி வரை நாள்தோறும் 12,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என புதிய உத்தரவை பிறப்பித்தது.
இந்த புதிய உத்தரவால் தமிழகத்துக்கு கூடுதல் நீரை தர வேண்டியுள்ளது. ஆகையால் இந்த உத்தரவிலும் திருத்தம் வேண்டும் என்று கர்நாடகா தரப்பு வழக்கறிஞர் பாலி நாரிமன் கேட்டுக் கொண்டார். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, பிறப்பித்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று கறாராக கூறிவிட்டது.