மேகதாது அணை கட்ட ரூ.5,912 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் !
மேகதாதுவில் அணை கட்ட 5,912 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
பெங்களூர்: மேகதாது பகுதியில் அணை கட்ட 5,912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கேள்விக் குறியாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான 5,912 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
மேலும் மேகதாது பகுதியில் 400 மெகாவாட் நீர்மின் உற்பத்தி நிலையம் கட்டவும் திட்டமிட்டுள்ளது கர்நாடக அரசு. ஏற்கனவே 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.
இது குறித்து கர்நாடகா சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா கூறுகையில், குடிநீர், நீர்பாசனம், மின்சார உற்பத்திக்காக 5,912 கோடி ரூபாய் செலவில் 66.5 டி.எம்.சி. தண்ணீர் சேகரிக்க மேகதாது அருகில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதலும் கிடைத்துள்ளது.
மேகதாது திட்ட அறிக்கை விரைவில் மத்திய நதிநீர் ஆணையத்திற்கும், காவிரி கண்காணிப்பு குழுவிற்கும் அனுப்பப்படும். மத்திய சுற்று சூழல் வனத்துறையிடமும் அனுமதி பெறப்படும். மேகதாது அருகில் 441.2 மீட்டர் உயரத்தில் 66.5 டி எம்.சி. தண்ணீர் சேகரிக்கும் திறன் உடைய அணை கட்டப்படும். இந்த அணை கே.ஆர்.எஸ். அணையை விட பெரிதாக இருக்கும். 39.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
இந்நிலையில் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் தமிழகத்தில் தற்போது வறண்டு கிடக்கும் காவிரி டெல்டா மாவட்டங்கள் எதிர்காலத்தில் பெருமளவு பாதிக்கப்படும். ஏற்கனவே பருவமழை பொய்த்து போனதால் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வறட்சியால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக காட்சி அளிக்கின்றன. இந்நிலையில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்டினால் டெல்டா மாவட்ட விவசாயம் கேள்விக் குறியாகும் என தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.