சட்டசபையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக ஆவேச பேச்சு வேண்டாம்.. கர்நாடக சபாநாயகர் எச்சரிக்கை
பெங்களூர்: காவிரி நதிநீர் விவகாரம் பற்றி விவாதிக்க நடைபெறும் கர்நாடக சிறப்பு சட்டசபை கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கடும் வார்த்தைகளை பிரயோகிக்க கூடாது என்று சபாநாயகர் கே.பி.கோலிவாட் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
காவிரி நதியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 20ம் தேதி தீர்ப்பளித்தது.
இதனால் கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக சட்டப்பேரவையின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது கர்நாடக அரசு.
கூட்டத்திற்கு முன்பாக, பேரவை சபாநாயகர் கோலிவாட், மேலவை தலைவர் சங்கரமூர்த்தி ஆகியோர் தலைமையில், முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், ம.ஜ.த தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உறுப்பினர்கள் பேசக்கூடாது, கர்நாடக வறட்சி நிலை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று, சபாநாயகர் கோரிக்கைவிடுத்தார். அனைத்து உறுப்பினர்களும் தலா 5 நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது, பேரவை கூட்டத்தை 2 மணிநேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர்.