கர்நாடக சட்டசபை தேர்தல்: தெலுங்கு மக்களுக்கு இருக்கும் தெளிவு தமிழர்களுக்கு எப்போது வரும்?
தங்களது, மொழி, ஜாதி வேட்பாளரா என்பதே முக்கியமே தவிர, அவர் எந்த கட்சி என்பது தெலுங்கர்களுக்கு முக்கியம் இல்லை என்பதே தேர்தல் வரலாறு சொல்லும் பாடம்.
Recommended Video
பெங்களூர்: கர்நாடக தேர்தலில் தெலுங்கர்கள் வாக்குகள் மிகுந்த முக்கியத்துவம் பெறும் நிலையில், இம்முறை பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தெலுங்கு தேசம் தரப்பில் இருந்து கர்நாடக வாழ் தெலுங்கர்களுக்கு பகிரங்கமாகவே வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதை செய்யவில்லை என கண்டனம் தெரிவித்து அம்மாநில முதல்வர், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.
இந்த நிலையில், கர்நாடக தேர்தலில் தெலுங்கர்கள் எந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தெலுங்கர்கள் அதிகம்
கர்நாடகாவில் தெலுங்கு பேசும் மக்கள் மிக அதிகம். கன்னடம், உருது ஆகிய மொழிகளை தொடர்ந்து 3வதாக தெலுங்கு பேசும் மக்கள்தான் இம்மாநிலத்தில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாகத்தான் தமிழர்கள் உள்ளனர். பெங்களூரில் மட்டும் தெலுங்கர்கள் எண்ணிக்கை சுமார் 25 லட்சம். இதுபோக ஆந்திரா, தெலுங்கானாவை ஒட்டியுள்ள கர்நாடக மாவட்டங்களில் அவர்கள் கணிசமாக உள்ளனர். எனவே சுமார் 40 தொகுதிகளில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அளவுக்கு அவர்கள் வாக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
செல்வந்தர்கள்
தெலுங்கர்களிலும், ரெட்டி, பலிஜா நாயுடு ஜாதியினர் கர்நாடகாவில் அதிகம். தொழிலதிபர்களாகவும், ரியல் எஸ்டேட் ஏஜென்டுகளாகவும் அதிகம்பேர் தெலுங்கர்களாக உள்ளனர். கர்நாடக அரசியலில் இவர்களுக்கு பெரும் செல்வாக்கு உள்ளது. தமிழர்களுக்கு எந்த லாபியும் இல்லாத நிலையில், தெலுங்கர்களுக்கு எந்த அரசு வந்தாலும் வாய்ஸ் உள்ளது. தெலுங்கர்கள் பலரும் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எந்த கட்சி ஆட்சியாக இருந்தாலும் இதில் கணிசமானோர் அமைச்சர்களாகிவிடுகிறார்கள். இதனால் கர்நாடகாவில் தெலுங்கர் கொடி பறக்கிறது.
தமிழர்களின் தோல்வி
அதேநேரம், தமிழர்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்பவர்களாகவும், பெங்களூருக்கு வந்து செல்லும் சாப்ட்வேர் இன்ஜினியர்களாகவுமே இருப்பதால் அரசியலில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. சற்று நல்ல நிலையில் இருக்கும் செல்வந்த தமிழர்களாலும், கன்னட, தெலுங்கு லாபிக்கு முன்பாக போராட முடிவதில்லை. எனவே கர்நாடக அரசியல் கட்சிகள் தெலுங்கர்களை ஈர்ப்பதில் எப்போதும் தனி கவனம் செலுத்தும். ஆனால், இம்முறை, தெலுங்கு தேசம் கட்சியின் கோரிக்கையை ஏற்று கர்நாடகவாழ் தெலுங்கர்கள் பாஜகவை புறக்கணிப்பார்களா என்ற கிலி பாஜக வட்டாரத்தில் உள்ளது.
வேட்பாளர்கள்தான் முக்கியம்
ஆனால், இதில் முக்கியமான ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். கர்நாடகாவிலுள்ள தெலுங்கர்கள், கட்சியைவிட, வேட்பாளர்களை பார்த்துதான் வாக்களிக்கிறார்கள். பெங்களூரின் பிடிஎம் லேஅவுட் தொகுதியில் காங்கிரசில் இருந்து ராமலிங்க ரெட்டியை தொடர்ச்சியாக, தேர்ந்தெடுக்க உதவும் அதே தெலுங்கு மக்கள்தான், பொம்மனஹள்ளி தொகுதியில் பாஜகவில் இருந்து, சதீஷ் ரெட்டியை தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கிறார்கள். அதாவது, தங்களது, மொழி, ஜாதி வேட்பாளரா என்பதே முக்கியமே தவிர, அவர் எந்த கட்சி என்பது தெலுங்கர்களுக்கு முக்கியம் இல்லை என்பதே தேர்தல் வரலாறு சொல்லும் பாடம். எனவே தெலுங்கு மக்கள் கணிசமாக உள்ள பகுதிகளில் தெலுங்கு பூர்வீக வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய கட்டாயம், கர்நாடக கட்சிகளுக்கு வந்துவிடுகிறது. இந்த விஷயத்தில்தான் தமிழர்கள் கோட்டைவிடுவார்கள்.
தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை
தமிழர் வேட்பாளராக நின்றாலும் கூட, காங்கிரஸ் அல்லது பாஜக அல்லது மஜத கட்சியை சேர்ந்த ஒரு கன்னடருக்கோ, தெலுங்கருக்கோதான், தமிழர்கள் வாக்களிப்பது பெரும்பாலும் அரங்கேறும். பணம், மது ஆகியவை ஏழை எளிய தமிழ் கூலி தொழிலாளிகள் வாக்குகளை ஈர்க்க பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, அந்த வேட்பாளர்கள் இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டமாக சில தமிழர்களை கட்சியில் சிறு பதவி கொடுத்து வைத்திருப்பார்கள். அவர்களை வைத்து, சற்று வசதி படைத்த அல்லது நடுத்தர வர்கத்து தமிழர்கள் வாக்குகளை ஈர்ப்பார்கள். அதாவது தமிழர்களை வைத்தே தமிழர்கள் வாக்குகள் வேட்டையாடப்படும். இதனால்தான், தேர்தலுக்கு பிறகு தமிழர்களால் அரசியலில் லாபி செய்ய முடியாத நிலை ஏற்படும். கிருஷ்ணா நதி பிரச்சினையின்போது கர்நாடகாவில் தெலுங்கர்களை யாரும் தொந்தரவு செய்வதில்லை. காவிரி பிரச்சினை வரும்போதெல்லாம் கன்னட அமைப்பினரால் தமிழர்களும், அவர்கள் சொத்துக்களும் சூறையாடப்படுவதன் காரணத்தை இந்த பின்புலத்தில் இருந்துதான் பார்க்க வேண்டும்.
பெரிய தாக்கம் இருக்காது
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விஷயத்தில் அனைத்து தெலுங்கர்களும் தெலுங்கு தேசம் கோரிக்கையை ஏற்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. வேட்பாளரை பார்த்து வாக்களிக்கும் பழக்கம் மட்டுமில்லாமல், தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கர்களும் இருப்பதால் அவர்களுக்கு ஆந்திர பிரச்சினை பெரிய விஷயம் இல்லை. தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி சார்பில், பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று யாருமே கோரிக்கைவிடுக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.