ஜேடிஎஸ்-காங்.க்கு தாவும் 3 'ஒக்கலிகா' எம்.எல்.ஏக்கள்... கடைசிநேர 'பரபர' தாவல்
கர்நாடக சட்டசபையில் இன்று பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், பாஜகவில் உள்ள மூன்று எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் இன்று பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், பாஜகவில் உள்ள மூன்று ஒக்கலிகா கவுடா சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் காங்கிரஸ்- ஜேடிஎஸ் அணிக்கு தாவ வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.
இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.
தற்போது இருக்கும் பலத்தை வைத்துக் கொண்டு பாஜக அக்கட்சியாள கண்டிப்பாக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. இன்னும் 7 பேர் தேவைப்படும் நிலையில், பாஜகவில் இருந்து 3 பேர் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு ஆதரவு தர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடக அரசியலில் எப்போதும் இருக்கும் ஒரு ஜாதி பாகுபாடுதான் இந்த கடைசி நேர ஆதரவு மாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தற்போதைய பாஜக முதல்வர் எடியூரப்பா லிங்காயத்து இனத்தை சேர்ந்தவர். மாறாக குமாரசாமி ஒக்காலிக என்ற இனத்தை சேர்ந்தவர். இரண்டு பிரிவுகளுக்கு இடையில் அடிக்கடி அரசியல் ரீதியான பிரச்சனை வந்து கொண்டு இருக்கும்.
தற்போது அந்த பிரச்சனை காரணமாக பாஜகவில் உள்ள மூன்று ஒக்காலிக பிரிவை சேர்ந்த எம்எல்ஏக்கள் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது. எடியூரப்பா லிங்காயத்து பிரிவை சேர்ந்தவர் என்பதால், காங்கிரஸ்-மஜத கூட்டணியில் உள்ள 15 லிங்காயத்து எம்எல்ஏக்கள் பாஜக கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் லிங்காயத்துக்களுக்கு தனி மத அடையாளம் கொடுத்தது சித்தராமையா என்பதாலும், பாஜக அதற்கு எதிராக இருந்தது என்பதாலும், இந்த லிங்காயத்து எம்எல்ஏக்கள் அப்படியே மொத்தமாக பாஜகவிற்கு ஆதரவளிக்க மாட்டார்கள், சிலர் மட்டும் செல்ல வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.